மும்பை: வளர்ந்து வரும் பொருளாதார சந்தைகளில் பண உள்ளோட்டத்திற்கு உதவும் அமெரிக்க கருவூலத்தின் நிதி ஊக்கத் திட்டங்களை குறைத்துக் கொள்ளும் அந்நாட்டு முடிவினை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையிலுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க கருவூலம் இந்த நிதி சீரமைப்பு நடவடிக்கைகளை எப்போது எடுக்கும் என்பதை அறிய, புதன்கிழமை அவ்வமைப்பு கூட்டவுள்ள கூட்டத்தின் முடிவுகளை உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
இதையொட்டிய கவலைகளால், வளர்ந்துவரும் பொருளாதார சந்தைகளில் முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்படுகின்றன. கடும் வருவாய் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கும் இந்தியா இதனால் அதிகம் பாதிக்கப்படும். இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 விழுக்காடு அளவிற்கு கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
இந்திய பொருளாதார விவகாரங்கள் செயலர் அர்விந்த் மாயராம் கருத்து தெரிவிக்கையில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை மற்றும் அந்நிய செலாவணி இருப்புகளை சரி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அமெரிக்க நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகளினால் எதிர்பார்க்கப்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று ஜி-20 நாடுகளின் மாநாட்டினையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.
"எனவே, எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் சந்தைகளை நிலையாக வைப்பதுடன் அமெரிக்க கருவூல முடிவுகளால் பெரும் விளைவுகள் ஏற்படாத வண்ணம் வைக்கும் என நம்புகிறேன்" என அவர் தெரிவித்தார். "விளைவுகள் இருக்காது என்று கூறவில்லையென்றாலும், விளைவானது ரூபாயின் மதிப்பில் சிறிய அளவிலும் குறைந்த காலத்திற்கும் இருக்கும் என்று கூறுவேன்" என்று மேலும் அவர் கூறினார்.
கொள்கை வகுக்கும் அமெரிக்க திறந்த சந்தைகள் குழு, புதன்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் தன் முடிவினை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதத்திற்கு 8,500 கோடி டாலர்கள் மதிப்புள்ள பத்திரங்களை வாங்க நினைக்கும் அமெரிக்கா, அதை தற்போதைக்கு முடித்துக்கொள்ளாது என்று எதிர்பார்க்கப்பட்டாலும், புதிய மற்றும் வலுவான பொருளாதார ஆதாரங்கள் இந்த நிதிச்சீரமைப்புகள் விரைவிலேயே நடக்கலாம் என்று தெரிவிக்கின்றன.