டெல்லி: உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 100 ஏக்கரில் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அம்மாநில அரசு ஹெச்சிஎல் நிறுவனத்தின் முதலீட்டு கிளை நிறுவனமான வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ஸ் நிறுவனத்திடம் இந்த திட்டத்தை ஒப்படைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மேலும் 5,000 பேருக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் ஒரு திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய 60 ஏக்கர் பரப்பளவில் கட்டமைப்போடு இந்த தொழில்நுட்ப பூங்கா விளங்கும். மீதமுள்ள இடம் பிற அடிப்படை கட்டமைப்புகளுக்கும் சமுதாய வளர்ச்சித் திட்டங்களுக்கும் பயன்படுவதாக இருக்கும்.

உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் "இந்த தகவல் தொழில்நுட்ப நகரம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கும். மேலும், ஏறக்குறைய 25,000 வேலை வாய்ப்புகளை இது இளைஞர்களுக்காக ஏற்படுத்தி தரும்" என்றார்.
"தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நிறுவ தேவையான ஹார்டுவேர் தயாரிப்புகள், தகவல் தொடர்பு கருவிகள் போன்ற பிற அடிப்படை கட்டமைப்புத் தேவைகளும் பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு மாநிலத்தில் உள்ள மக்கள் நல்ல வாய்ப்புகளுக்காக பிற மாநிலங்களுக்கு பெயர்வதையும் தடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஹெச்சிஎல் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் இதுகுறித்து பேசுகையில் "இந்த தகவல் தொழில்நுட்ப நகர உருவாக்கம், புதிய கண்டுபிடிப்புகளை ஒட்டிய வளர்ச்சியை அதிகரிப்பதோடு மாநிலத்தில் சமுதாய வளர்ச்சிக்கும் உதவும்" என்றார்.


Click it and Unblock the Notifications