மும்பை: 2014ஆம் ஆண்டில் நாட்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளது. புதிய ஊழியர்களை தங்களின் நிறுவன பதிவேட்டில் சேர்க்க அனைத்துத் துறை நிறுவனங்களும் முற்பட்டு வருவதால் வேலை வாய்ப்புகள் மழையென கொட்டும் என்றும், 2014 ஆம் வருடத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றுவோருக்கு 20 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வை வழங்க நிறுவனங்கள் எத்தனித்து வருகின்றன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பல்வேறு மனித வள ஆலோசகர்களின் கணிப்புகளின் படி, வேலை வாய்ப்பை பொறுத்தவரை இடைநிலை மற்றும் முதுநிலை ஊழியர்களுக்கான பணியிட வாய்ப்புகள் மந்தமாகவும், முக்கியமான இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்ட சூழல் நிலவியதுமான 2013ஆம் வருடத்தைப் போலன்றி, 2014 ஆம் வருடம் மிகப் பிரகாசமாக இருக்கும்.
இந்த வருடத்தில், மென்மேலும் பல கார்ப்பரேட்கள் தத்தம் வணிகங்களில் முதலீடு செய்யத் தயாராகி வருவதனால், நாட்டில் உள்ள வேலை தேடும் இளைஞர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் கிட்டும்.
"ஆம், 2014 ஆம் ஆண்டில் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு பணி மும்முரமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. உலகளாவிய பொருளாதாரம் மேம்பட்டு வருவதாலும், உலகளாவிய சந்தைக்குத் தேவையான மனித வளத்தை வழங்கி வரும் மிகப்பெரிய சர்வீஸ் புரொவைடராக இந்தியா விளங்கி வருவதாலும், வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மிகப் பிரமாதமான ஆண்டாக இருக்கும்," என்று முன்னணி எக்ஸிக்யூட்டிவ் ஸெர்ச் நிறுவனமான குளோபல்ஹன்ட்டின் எம்டி சுனில் கோயல் கூறியுள்ளார்.
தொழில்துறை கணிப்புகளின் படி, 2014 ஆம் ஆண்டில் சுமார் 8.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் புது பாங்கிங் லைசென்ஸ்களின் விநியோகம் பிரதான அங்கம் வகிக்கக்கூடிய அதே வேளையில், ஐடி, ஹெல்த்கேர், விவசாயம் சார்ந்த வர்த்தகம், உள்கட்டமைப்பு மற்றும் கல்வி போன்ற துறைகளிலும் எக்கச்சக்கமான வேலை வாய்ப்புகள் உருவாகும் போக்கைக் காணலாம்.
"கடந்த ஆண்டு நிலவிய நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக வேலை தேடுவோருக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி 2013ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக இல்லை. ஆனால் 2014 ஆம் ஆண்டு, வேலை தேடுவோருக்கு நம்பிக்கையளிப்பதாக மலர்ந்துள்ளதோடு, சுமார் 8.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகளை பல்வேறு துறைகளிலும் உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது," என்று மைஹையரிங்க்ளப்.காம் & ஃப்ளிக்ஜாப்ஸ்.காம் நிறுவனத்தின் சிஇஓவாகிய ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.
ஊதியத்தைப் பொறுத்தவரை, 2014 ஆம் ஆண்டில் பெரும்பாலான துறைகளில் சராசரி உயர்வு ஒற்றை இலக்கத்திலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மிகச்சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 15-20 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வை எதிபார்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இந்த புது வருடம் குறைந்த பட்சமாக 10-12 சதவீதம் என்ற விகிதத்தில் இரட்டை-இலக்க ஊதிய உயர்வை அளித்து, ஊழியர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவிருக்கிறது. 2014 ஆம் ஆண்டில், நிறுவனங்கள் தங்களின் காம்பன்ஸேஷன் பேக்கேஜ்களை மறுசீரமைத்து, ஊழியர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கக்கூடிய அணுகுமுறையை கண்டடைய முயற்சிகள் மேற்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது." என்று இந்தியன் ஸ்டாஃபிங் ஃபெடரேஷன் அமைப்பின் வைஸ் பிரசிடென்ட் ஆகிய ரிதுபர்னா சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.