டெல்லி: அமெரிக்கா நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது, இதனால் வளர்ந்துவரும் பல நாடுகள் பாதிக்கும் நிலையில் இந்தியா இதனை நன்கு எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக நிதியமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அசாதாரணமான பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளப் போவதாக அந்நாட்டு அரசு முதல் அறிவிப்பை கடந்த மே மாதம் வெளியிட்ட போது தங்களுடைய முதலீட்டு மதிப்பு குறையும் என அஞ்சி பெரும்பாலான முதலீட்டாளர்கள் வளரும் சந்தைகளில் இருந்த முதலீட்டினை திரும்பப்பெற முனைந்தனர்.
"மே மாதத்தின் நிதி நிலை சற்று கவலையளிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அதற்குத் தகுந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்" என தாவோஸ் பொருளாதார சந்திப்பின் போது சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இதனால் வளரும் மற்றும் புதிய பொருளாதார நாடுகளில் சில வியக்கதக்க மாற்றம் ஏற்படும் ஆனால், மே மாத கவலையளிக்கும் நிலையினை ஒப்பிடுகையில் நாம் தற்போது அதனை எதிர்கொள்ள நன்கு தயாராக உள்ளோம் என நினைக்கிறேன்" என்றார்.
நம் பொருளாதாரம் நன்கு முன்னேறியுள்ளதையும் இதன் மூலம் 8 சதவிகித பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பதையும் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என நினைக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
"2013-14 ஆம் நிதியாண்டில் வளர்ச்சி 5 சதவிகிதமாக மட்டுமே இருந்தாலும் 2014-15 ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 6 சதவிகித வளர்ச்சியை கடப்போம்" எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications