பெங்களுரூ: அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய இந்திய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் குறித்த ஒரு ஆய்வில் ஐஐஎம்-பெங்களுரூ வர்த்தக மற்றும் மேலாண்மை ஆய்வுகள் துறையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெங்களுரூவை சேர்ந்த மேலும் நான்கு கல்லூரிகள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தின் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ஷாரிக் ஹசன் இந்த ஆய்வினை நடத்தினார். சமூக அறிவியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்த மதிப்பீடுகளை இந்திய கல்வி நிறுவனங்களுக்கு வழங்கினார்.
பல்கலைக்கழகங்கள் சமூகவியல், சமூகப்புள்ளியியல், மற்றும் குடும்ப இயல்பு, பொருளாதாரம், மனஇயல் மற்றும் வர்த்தக மேலாண்மை ஆகிய பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டன.
தர மதிப்பீடானது ஒரு கல்வி நிறுவனம் வெளீயிட்ட ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகளையும், மற்ற ஆய்வுகளில் அந்தக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள எண்ணிக்கையையும் பொருத்து அமையும்.
இதில் ஐஐடி-டெல்லி, ஐஐஎம்-கொல்கட்டா மற்றும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஆகியவை ஐஐஎம் பெங்களுருவைத் தொடர்ந்து பின்வரும் இடங்களைப் பிடித்தன. இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ் பத்தாவது இடத்தையும், இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிடியுட் பெங்களுரு 27 ஆவது இடத்தையும் பிடித்தன.
இன்ஸ்டிடியுட் ஆஃப் சோஷியல் அண்ட் எகனாமிக் சேஞ்ச் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியுட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ் ஆகிய பெங்களுருவைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் 16வது மற்றும் 31வது இடத்தை சமூகப்புள்ளியியல் மற்றும் குடும்ப இயல் பிரிவுகளில் பிடித்தன.
ஐஐஎம் பெங்களுருவின் இயக்குனர் (பொறுப்பு) பேராசிரியர் தேவநாத் திருபதி இதுகுறித்துக் கூறுகையில் "இந்த ஆய்வு ஐஐஎம் பெங்களுரு ஆய்வுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.,
"இந்த ஆய்வு இந்தியாவின் சமூக அறிவியல் ஆய்வாளர்கள் எங்கு வெளிப்படுகிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஐஐஎம் பெங்களுருவின் பல்வேறு துறைகளுள் வர்த்தக மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அளவுகளைக் குறித்த ஆர்வமூட்டத்தக்க விவரங்களின் மூலம் இந்த கல்வி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது" என அங்கு பணிபுரியும் துணைப் பேராசிரியர் அர்னாப் முகர்ஜி தெரிவித்தார்
ஆய்வாளரின் தகவல்கள் படி, முதற்கட்ட விவரங்கள், சமூக அறிவியல் துறையிலுள்ள இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் பட்டியலிடப்பட்ட 3015 ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட எந்த ஒரு கட்டுரையையும் கொண்டிருக்கும். கட்டுரையாளர் ஏதாவதொரு இந்திய கல்வி நிறுவனத்தோடு தொடர்புடையவராக இருக்க வேண்டும் மேலும் அவர் 2000-2010 ஆண்டுகளுக்குள் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்க வேண்டும்.