டெல்லி: வருமான வரித்துறை வழங்கும் புதிய பான் கார்டுகளுக்கான கட்டணம் வரிகள் உட்பட ரூபாய் 105 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு பான் பெற வெறும் 96 ரூபாய் செலுத்தினால் போதும். ஆனால் இப்போது இக்கட்டணத்தை வருமான வரித்துறையினர் 105 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். மேலும் வருமான வரித்துறை சமீபத்தில் பான் கார்டு வழங்கக் கொடுக்கப்படும் ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்தின் தனிப்பட்ட மற்றும் சொந்த விவரங்களை சரிபார்க்க புதிய செயல்முறைகளை அறிவித்தது.
இந்த நடவடிக்கையானது, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் அல்லது போலியான பான் கார்டுகளை ஒழிக்கும் விதமாக எடுக்கப்பட்ட்து என அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இந்த புதிய பான் கார்டைப் பெற செலுத்த வேண்டிய கட்டணம், வரிகள் உட்பட ரூபாய் 105 ஆகும். இந்த சேவைக் கட்டணம் பெரும்பாலும் மாற்றப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. புதிய செயல் முறையான பிறந்த தேதி, முகவரி மற்றும் அடையாளங்களை சரிபார்த்தல், போலி அல்லது ஒன்றிற்க்கும் மேற்பட்ட பான் கார்டுகள் ஆகியவை குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது" என ஒரு மூத்த வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்தார்.
பிப்ரவரி 3 முதல்..
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பான் கார்டு வாங்க விரும்புவோர் அடையாளம், முகவரி மற்றும் பிறந்த தேதி குறித்த ஆவன நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும் அவற்றை பான் கார்டு சேவை மையங்களில் கொடுக்கும்போது அவற்றிற்கான அசல்களையும் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
கடுமையான விதிமுறைகள்
ஆவன நகல்கள் அசலுடன் வைத்து சரிபார்க்கப்பட்டு அசல் ஆவனங்கள் திருப்பித்தரப்படும் அதே வேளையில் நகல்கள் விண்ணப்பதாரரால் தற்சான்றிடப்பட வேண்டும்.
வரி ஏய்ப்பு
வருமான வரித்துறை பெரும்பாலான விண்ணப்பங்களில் ஒருவரே பல பான் கார்டுகளை வைத்திருப்பதையும் ஆவனங்களில் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்யவும் வருமானத்திற்கு அதிகமான பினாமி சொத்துகளை சேர்க்க முனைவதையும் கண்டறிந்தது.
தவறில்லாத விவரங்கள்
"வருமான வரித்துறையின் தொழில் நுட்ப செயல்முறைகள் பான் கார்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் தற்போது தவறுகளில்லாத ஒரு நல்ல விவர அமைப்பாக இருக்கும்" என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
புதிய மாற்றங்கள்
மேலும் புதிதாக வழங்கப்படும் கார்டுகளில் முகவரிக்கு பதிலாக பெயரும் பிறந்த தேதியும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்தார். பான் என்னும் தனிப்பட்ட கணக்கு எண் வரி செலுத்துவோர்க்கு வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட 10 இலக்கங்களைக் கொண்ட எண்ணாகும்.