டெல்லி: ஹெச்சிஎல் கார்ப்பொரேஷன் கடந்த வாரம் ஹெச்சிஎல் ஹெல்த்கேர் என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்தியதன் மூலம் மருத்துவத் துறையில் தனது காலடியை பதித்துள்ளதை பகிரங்கமாக அறிவித்துள்ளது.
ஹெச்சிஎல் ஹெல்த்கேர் அமைப்பு சிறந்த சேவை, நவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பயிற்சியை வழங்கி, மருத்துவத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, அதிகரித்துக் கொண்டிருக்கும் தரமான சேவைக்கான தேவையை பூர்த்தி செய்ய விழையும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
மல்ட்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
இதன் தொடக்கமாக, ஹெச்சிஎல் மற்றும் ஷிவ் நாடார் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான ஷிவ் நாடார், ஹெச்சிஎல் அவிட்டாஸ் (HCL Avitas) என்ற பெயரிலான மல்ட்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் (Johns Hopkins) மெடிஸின் இன்டர்நேஷனலுடன் இணைந்து கூட்டு முயற்சியாக தொடங்கியுள்ளார்.
டெல்லியில் 2 மருத்துவமனை
டெல்லியில் வெள்ளிக்கிழமை முதல் செயல்படவிருக்கும் இந்த இரு ஹெச்சிஎல் அவிட்டாஸ் மருத்துவமனைகள் "எவிடன்ஸ்-பேஸ்ட் சிஸ்டம்ஸை உபயோகிப்பதோடு, நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து, உலகளவில் மருத்துவ சிகிச்சைக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள தரம் மற்றும் பயிற்சிக்கான நடைமுறைகளை பின்பற்றி, இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஈடு இணையற்ற அனுபவத்தையும், நல்லாரோக்கியத்தையும்" வழங்கவிருக்கின்றன.
சிறந்த சேவை
ஹெச்சிஎல் அவிட்டாஸ் நீண்ட கால பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், நோயாளிகளை மையமாகக் கொண்டு, சிறந்த சேவையை வழங்கவுள்ளன.
கூட்டு முயற்சி
நோயாளிகளுக்கு தங்களின் மருத்துவ விவரங்களைப் பற்றியும், இந்த அமைப்பைச் சார்ந்த பிரபலமான சிறப்பு மருத்துவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஏதுவாக இந்த மருத்துவமனைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படவுள்ளன.
ஷிவ் நாடார் அறிக்கை
"கல்வி, ஹெல்த்கேர் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இம்மூன்றும் தான் நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முக்கிய ஆக்கசக்திகளாக இருக்கப்போகின்றன. ஹெல்த்கேர் துறையினுள் நாங்கள் நுழைந்ததை அறிவிக்கும் இந்நாள் எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது," என்று ஹெச்சிஎல் அவிட்டாஸின் தொடக்கவிழாவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திரு. ஷிவ் நாடார் கூறியுள்ளார்.
ரூ.1,000 கோடி முதலீடு
தற்போது சுமார் 1000 கோடி ரூபாயை முன் முதலீடு செய்துள்ள ஹெச்சிஎல் கார்ப்பொரேஷன், இந்த புராஜெக்ட்டுக்கு "எவ்வளவு பணம் தேவைப்படுமோ அவ்வளவு பணத்தையும்" முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
மருத்துவமனை கையகப்படுத்தல்
"நாங்கள் புதிய மருத்துவமனைகளை திறப்பதோடு, ஏற்கெனவே இயங்கி வரும் மருத்துவமனைகளையும் கையகப்படுத்தவுள்ளோம். தில்லியில் உள்ள இரு மருத்துவமனைகளுமே அவ்வாறு கையகப்படுத்தப்பட்டவை தாம்."
20 மில்லியன் மக்களுக்கு சேவை
"2020 ஆம் ஆண்டுக்குள் சுமார் 20 மில்லியன் மக்களை எட்ட வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு" என்று ஹெச்சிஎல் ஹெல்த்கேரின் வைஸ்-சேர் பர்ஸனாகிய ஷிகார் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.