பெங்களுரூ: உலகெங்கும் 1.5 லட்சம் பணியாளர்களை கொண்டு தகவல் தொழில்நுட்ப சேவையில் ஜம்பவானாக திகழும் இன்போசிஸ், அதிகமாக சம்பளம் பெறும் நபர்களையும், சரியாக வேலை பார்க்காத பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க போகிறது. செலவுகளை குறைத்து செயல்பாட்டு ஆற்றலை அதிகரிக்கும் நோக்கத்துடன் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஓய்வை அறிவித்து, பின்னர், நிறுவனத்தை மீண்டும் அதை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மீண்டும் நிறுவனத்திற்கு தலைமை வகித்திருக்கும், இன்போசிஸ் நிர்வாக தலைவர் திரு என்.ஆர்.நாராயணமூர்த்தி, அதிக சம்பளம் கொடுத்தும் ஒழுங்காக வேலை செய்யாத பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நாராயணமூர்த்தி
"அதிக சம்பளம் கொடுக்கப்பட்டும், நாங்கள் எதிர்ப்பார்த்த அளவிலான பங்களிப்பை அளித்து வராத பணியாளர்களை கண்டு கொண்டு உறுதி செய்வது எனக்கு அளிக்கப்பட்ட வேலைகளில் ஒன்றாகும். அப்படி பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படும், அல்லது அவர்கள் வேறு எங்காவது சென்று வேலையை தேடிக் கொள்ளலாம்." என்று ஆய்வாளர்களிடம் கூறியுள்ளார்.
நிறுவன செலவுகள்
பேங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லின்ச் இந்தியா இன்வெஸ்டார் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் தான், நிறுவனத்தின் செலவுகளை குறிப்பிட்ட அளவிற்கு குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சம்பளம்
கடந்த 2-3 வருடங்களில் எங்கள் செலவுகள் அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு, வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு, 2010-11-ல் ஈட்டிய ஒட்டு மொத்த வருவாயில் இருந்து 36% அளிக்கப்பட்டுள்ளது. இது 2012-13ஆம் ஆண்டில் 46.3 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தரமற்ற பணியாளர்கள்
இந்தியாவிற்கு வெளியே அதிக சம்பளத்துக்கு சில ஆட்களை பணியில் அமர்த்தியும் கூட அவர்கள் நிறுவனத்திற்கு போதிய பங்களிப்பை அளிக்காததும், அதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது." என்று அவர் கூறியுள்ளார்.
ஆன்-சைட் செலவுகள்
பணியாளர்களின் ஆக்கத்திறனை அதிகரிக்க பல வகையான உத்திகள் எடுக்கப்பட உள்ளது என்று மூர்த்தி ஆய்வாளர்களிடம் உறுதி அளித்துள்ளார். அதே போல் பல வேலைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து, ஆன்-சைட் செலவுகளையும் குறைக்க போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இன்போசிஸ்
"இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி வீதம் மீண்டும் சீராக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் அடிப்படையில் இந்த வளர்ச்சி வீதங்கள் அமையும்" என்று அவர் கூறியுள்ளார்.