ஹைதராபாத்: இந்தியாவில் விமான சேவையை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 200 சிறிய விமான நிலையங்களை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை இணைச் செயலர் ஜி. அசோக் குமார் தெரிவித்தார். இதனால் இந்தியாவில் சிறு நகரங்களை வாண் வழி மூலம் இணைக்கலாம். மேலும் இத்தகைய திட்டத்திற்கு சிறிய வகை விமானங்கள் பெரும் உதவியாக இருக்கும்.
இந்திய ஏவியேஷன் 2014 என்ற தலைப்பில் ஹைதராபாதில் ஒரு மாநாடு புதன் கிழமை தொடங்குகிறது. இதில் 8 நாடுகளைச் சேர்ந்த 250 விமான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்நிகழ்சியில் கலந்து கொள்ள வந்த சிவில் விமான போக்குவரத்துத்துறை இணைச் செயலர் ஜி. அசோக் குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது.
பெரிய விமான நிலையங்களையும், விமானங்களையும் செயல்படுத்துவது மிகவும் கடினம், அதேபோல் அதன் நிர்வாக செலவும் அதிகம். இத்தகைய செலவீனங்களை குறைக்க இந்தியாவின் முக்கிய நகரங்களில் சிறிய நிலையங்களை அமைப்பதன் மூலம் செலவுகளை குறைக்கமுடியும் என அவர் தெரிவித்தார். மேலும் இத்திட்டம் இன்னும் 20 வருடத்திற்குள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இப்போது இந்தியாவில் 400 விமானங்கள் மட்டுமே விமானச் சேவையில் ஈடுப்பட்டுள்ளது. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 1,000மாக எட்டும் என அவர் தெரிவித்தார்.