மும்பை: செபி எனப்படும் பங்கு மற்றும் பரிமாற்ற கட்டுப்பாட்டு அமைப்பு, தன்னுடைய கட்டுப்பாடின் கீழ் வரும் தரகு நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், பொறுப்பாளர்கள், முதலீட்டு பங்காளர்கள் மற்றும் நிதி மேலாண்மை நிறுவனங்கள் இனிமேல் முறைகேடான பணப்பரிமாற்றங்கள் மற்றும் தீவிரவாத செயல்களுக்கான நிதியளிப்புகள் ஆகியவற்றைத் தடுக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற ஒரு தனி இயக்குனரை நியமிக்கவேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த தனி இயக்குனர் மேலாண்மை இயக்குனராகவோ அல்லது நிறுவனங்களின் முழுநேர இயக்குனராகவோ, கூட்டுத் தொழிலில் ஒரு மேலாண்மைக் கூட்டாளியாகவோ, தனி நபர் தொழிலின் முதலாளியாகவோ அல்லது அறக்கட்டளைகளில் அறங்காவலராகவோ இருக்கலாம் எனத் தெரிகிறது.
இது ஏற்கனவே உள்ள முதன்மை அதிகாரிக்குக் கூடுதலான ஒரு தேவை எனவும் செபி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு
இந்த வழிமுறைகளை கண்காணிக்கவும் கடைபிடிக்கவும் தவறும் அந்த தனி இயக்குனர் மீது நிதிப் புலனாய்வு அமைப்பின் இயக்குனர் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவோ அல்லது அபராதம் விதிக்கவோ முடியும்.
இடைநிலை வர்த்தக அமைப்புகள், தங்கள் வாடிக்கையாளர் நாடுகள் அல்லது பகுதிகள், பரிவர்த்தனைகளின் இயல்பு, அளவு மற்றும் பரிவர்த்தனை முறைகள் தொடர்புடைய சந்தை அபாய ஆய்வுகளை மேற்கொண்டு, முறைகேடான பணப் பரிமாற்றம், தீவிரவாதச் செயல்களுக்கான நிதியுதவி ஆகியவற்றை அறிந்து, ஆய்வுசெய்து அவற்றைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்
இந்த ஆய்வு, இந்திய அரசு அல்லது செபி அமைப்பு வெளியிடும் குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்.
வாடிக்கையாளர் அல்லது பயனாளியின் அடையாளத் தகவல்கள், முகவரி ஆகியவற்றை உறுதிப்படுத்த மூன்றாம் நபர் அமைப்புகளின் தகவல்களை சார்ந்திருக்கும் இடை நிலை வர்த்தக அமைப்புகள் இனி அந்த மூன்றாம் நபர் அமைப்புகள் அங்கிகரிக்கப்பட்டவையாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்.