டெல்லி: உலகின் மிகப்பெரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சாம்சங் நிறுவனம் மத்திய அரசிற்கு சுமார் 70 கோடி ரூபாய் வரையிலான இறக்குமதி வரியை செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது. அதை கண்டித்து இந்தியாவின் டைரக்டரேட் ஆஃப் ரெவின்யூ இன்டலிஜென்ஸ் (டிஆர்ஐ) துறை சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாம்சங் இந்தியா நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பாக சுமார் 460 கோடி ரூபாய் மதிப்பிலான டாப்லெட், மொபைல் ஃபோன்களை நியாயமான இறக்குமதி வரியை செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
டாப்லெட்டுகளின் இறக்குமதிக்கு சுமார் 12 சதவிகித வரி விதிக்கப்படும் அதே வேளையில், மொபைல் ஃபோன்களின் இறக்குமதிக்கு 1 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு
சாம்சங் நிறுவனம் கடந்த 2012 ஏப்ரல் மற்றும் 2013 பிப்ரவரி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் தென் கொரியாவிலிருந்து டாப்லெட்டுகளை இறக்குமதி செய்த போது, சுமார் 70 கோடி ரூபாய் வரையிலான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது.
நோட்டீஸ்
இது குறித்து கடந்த மாதம் இந்நிறுவனத்துக்கு டிஆர்ஐ நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது என்றும் அத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்ரனர்.
நிறுவனத்தின் பதில்
இந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, "நாங்கள் தற்சமயம் அக்குறிப்பிட்ட நோட்டீஸை ஆய்வு செய்து வருகிறோம். எங்கள் நிறுவனம் இயங்கி வரும் அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் இருக்கக்கூடிய அனைத்து சட்டதிட்டங்களையும் தவறாது கடைபிடித்து வருகிறோம் என்பதை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்." என்று சாம்சங் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சட்ட நிபுணர்களின் உதவி
"சம்பந்தப்பட்ட துறையில் சிறந்து விளங்கும் சட்ட நிபுணர்களுடன் நன்கு கலந்து ஆலோசனை செய்து சாம்சங், இவ்விஷயத்தில் செயல்பட்டு வருகிறது." என்று அந்நிறுவன பிரதிநிதி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
சொத்துகளை கையகபடுத்துதல்
சாம்சங் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீஸில், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் அடிப்படையாகக் கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை தான் ஏன் கையகப்படுத்தக்கூடாது என்று டிஆர்ஐ கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.