மும்பை: இந்தியாவை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவது மருந்து விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபடும் சன் பார்மா நிறுவனம் அமெரிக்காவில் மருந்து விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட ரான்பாக்ஸி நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளது. சன் பார்மா நிறுவனம் ரான்பாக்ஸி நிறுவனத்தின் பங்குகள் உட்பட அனைவிதமான நிறுவன சொத்துக்களை சேர்த்து 3.2 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.
ஆனால் இந்தியா வர்த்தக தொலைகாட்சி நிறுவனமான சிஎன்பிசி-டிவி18 நிறுவனம் இந்த கைப்பற்றுதலின் மதிப்பு 4 பில்லியன் டாலர் என தெரிவித்துள்ளது.
ரான்பாக்ஸி நிறுவனம்
ரான்பாக்ஸி நிறுவனம் இந்தியாவின் மருந்து விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 63.4 சதவீதத்தை ஜப்பான் நாட்டின் டாய்சீ சேன்கியோ நிறுவனம் கொண்டுள்ளது. டாய்சீ சேன்கியோ நிறுவனத்திற்கும் அமெரிக்காவில் மருந்து விற்பனைக்கு அந்நாட்டின் யுஎஸ் புட் அண்டு டிரக் அமைப்பு தடைவிதித்துள்ளது. (அமெரிக்காவில் மருந்து விற்க கூடாது என்றால் இந்தியாவிலும் தான் விற்க கூடாது, அங்க மட்டும் மனிதர்கள் வாழ்கிறார்களா.. இதுகுறித்து இந்திய அரசு ஏன் கேள்வி எழுப்பவில்லை?? மக்கள் அவ்வளவு அக்கரை உள்ளது போல..)
பங்கு பரிமாற்றம்
ரான்பாக்ஸி நிறுவனத்தின் பங்குதார்களுக்கு ஒரு பங்கிற்கு ஈடாக சன் பார்மா நிறுவனத்தின் 0.8 பங்குகள் வழங்கப்படும் என சன் பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கையகப்படுத்துதல் காரணமாக சன் பார்மா நிறுவனம் உலகில் ஐந்தாவது மிக பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது குறிப்படதக்கது.
டாய்சீ சேன்கியோ
ரான்பாக்ஸி நிறுவனத்தின் இணை பங்குதாரர்ரான ஜப்பான் நாட்டின் டாய்சீ சேன்கியோ நிறுவனம் சன் பார்மா நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. இந்த பங்கு பிரிவிற்கு நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் டாய்சீ சேன்கியோ நிறுவனத்தின் சார்பாக நிர்வாக குழுவிற்கு ஒருவரை பரிந்துரைக்க சன் பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்கு நிலைகள்
இந்த நிறுவன கையகபடுத்துதலின் காரணமாக இன்று காலை டாய்சீ சேன்கியோ நிறுவனத்தின் பங்குகள் ஜப்பான் நாட்டு பங்குசந்தையில் 4.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்திய பங்கு சந்தையில் நிலையே வேறு
சிக்கலில் சிக்கித் தவிக்கும் ரான்பாக்ஸி நிறுவனதின் பங்கு நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது, சன் பார்மா நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்கிய செய்தி வெளிவந்தவுடன் ரான்பாக்ஸி நிறுவனத்தின் பங்குகளின் நிலை உயர துவங்கியது. இதில் என்ன கூத்து என்றால் இப்போது சன் பார்மா நிறுவனத்தின் பங்கு நிலை மோசமான நிலையில் உள்ளது. (சும்மா போன ஒணானை எடுத்து சட்டை பைக்குள் போட கதையாகிவிட்டது சன் பார்மா நிறுவனத்திற்கு.)
காரணம்
பிரச்சனையில் உள்ள ஒரு நிறுவனத்தை (ரான்பாக்ஸி) ஒரு பெறு நிறுவனம் (சன் பார்மா) வாங்கும் போது, பெரு நிறுவனங்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும் பிரச்சனையில் உள்ள நிறுவனத்திற்கு சுமை குறையும். அதேபோல் தான் இப்போது முதலீட்டாளர்களின் மதிப்பில் ரான்பாக்ஸி நிறுவனத்தின் மீது அதிகரித்து, சன் பார்மா நிறுவனத்தின் மீது குறைந்துள்ளது.