சென்னை: வரி ஒரு நாட்டின் முதுகெலும்பு, ஒவ்வொரு அரசும் மக்களிடம் பெற்ற வரியை நாட்டின் முன்னேற்றத்திற்காக தகுந்த முறையில் செலவிடும். இந்த வரி பணத்தை கொண்டு நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்த தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க முடியும். ஒவ்வொரு குடிமகனும் வரி செலுத்த வேண்டும், வரியை செலுத்த மறுத்தால் இது சட்டதிட்டத்திற்கு புறம்பான செயல்.
வருமான வரி விதிமுறைகளை கடைபிடிக்காதிருப்பது பெரும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அவ்வாறு கட்டாத தொகைக்கு வருமான வரிச்சட்டம் விதி 234-ன் கீழ் ஒரு தொகையினை வட்டியாக கட்டவேண்டியிருக்கும்.
வருமான வரி விவரங்களை சமர்ப்பிக்கத் தவறுதல் - விதி 234ஏ (வரிசை 1 எனப் படிக்கவும்)
முன்கூட்டிய வரி செலுத்தத் தவறுதல் - விதி 234பி
முன்கூட்டிய வரியை தள்ளிப் போடுதல் - விதி 234சி
வரி நிலுவையின் மீதான வட்டி பின் வருமாறு கணக்கிடப்படுகிறது. இது மூன்று பிரிவுகளாக உள்ளதோடு பின்வரும் பிரிவு இரண்டாவதாகும். இது விதி 234பி-யுடன் தொடர்புடையது.
பிரிவு 2: விதி 234பி (முன்கூட்டிய வரி நிலுவை மீதான வட்டி) போன்ற பரிவுகளின் கீழ் அபராதம் முதல் சிறை தண்டனை வரை விதிக்கப்படும்.
முன்கூட்டிய வரி என்றால் என்ன?
முன்கூட்டிய வரி என்பது வருடத்தின் இறுதியில் செலுத்தாமல் ஒவ்வொரு முறையும் வருமானம் வரும்போதும் செலுத்தவேண்டிய வரியாகும். ஆகவே ஒரு நிதியாண்டில் உங்களுடைய வருமான வரித்தொகை ரூபாய் பத்தாயிரம் என வைத்துக்கொண்டால், அதை மொத்தமாக ஆண்டின் இறுதியில் செலுத்தாமல் தவணைகளில் நீங்கள் செலுத்த வேண்டும்.
முன்கூட்டிய வரி செலுத்தவேண்டியவர்கள் யார்?
சம்பளம் பெறுவோர், சுயதொழில் புரிவோர், வர்த்தகர்கள் உட்பட அனைத்து வரி ஆய்வுக்குட்பட்டோரும் இந்த வரியை செலுத்தவேண்டும். சம்பளம் பெறுவோர் வருமானத்தில் டிடிஎஸ் (TDS) எனப்படும் வருவாய் மூல வரியை அவர் பணிபுரியும் நிறுவனம் பிடித்துகொள்ளும். எனவே அவர்கள் தனியாக எந்த முன்கூட்டிய வரியையும் செலுத்தத் தேவையில்லை. எனினும், அவர்களுக்கு சம்பளம் தவிர பிற வருமானங்கள் இருப்பின், அவர்கள் அதற்குத் தகுந்தாற்போல் முன்கூட்டிய வரியினை செலுத்தவேண்டும்.
வரி நிலுவை வட்டி
வரி நிலுவையின் மீதான வட்டியை தவிர்க்க நீங்கள் செலுத்தவேண்டிய முன்கூட்டிய வரியில் 90 சதவிகிதத்தினை மார்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரித்துறை 10 சதவிகிதம் வரை உள்ள வரி நிலுவையை அவர்களாகவே கணக்கில் தவிர்த்து விடுவார்கள்
வட்டி
நிலுவை வரியின் மீதான வட்டியானது 90 சதவிகித மொத்த வரியில் மாதத்திற்கு 1 சதவிகிதம் என்ற விகிதத்தில் விதிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு
இந்த நிதியாண்டிற்கான உங்கள் வரியானது ஒரு லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்த தொகையை நான்கு மாதம் தாமதமாக ஜுலை 15 ஆம் தேதி செலுத்துகிறீர்கள்.
எனவே வட்டி = 90000 × 1 சதவிகிதம் × 4 (மாதம்) = ரூபாய் 3600. ஆகவே உங்கள் வரிக்கு மேல் ரூபாய் 3600 ஐ வட்டியாக நீங்கள் செலுத்தவேண்டியிருக்கும்.