மும்பை: 2014-15ம் நிதியாண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் சுமார் 1.4 பில்லியன் டாலர்கள் வரை நஷ்டத்தை சந்திக்க உள்ளன. அதிக செலவுகள் உள்ளிட்ட பல காரணங்களால் இத்தகைய பெரும் நஷ்டம் ஏற்படப் போவதாக ஒரு ஆய்வு நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறையை பற்றி அவ்வபோது ஆய்வை மேற்கொள்ளும் ஆசியா பசிபிக் மையம் என்ற ஆய்வு நிறுவனம் இதுகுறித்த ஒரு அறிக்கையை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது.
போட்டிகள், செலவுகள்
நாள்தோறும் புதிய புதிய விமான நிறுவனங்கள் இந்தியாவில் வந்து கொண்டிருப்பதால், போட்டிகளைச் சமாளிப்பதற்காக பல நிறுவனங்கள் கட்டணச் சலுகைகளை அறிவிக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்த நிறுவனங்களை நடத்துவதற்கு ஆகும் செலவுகள் மட்டும் தாறுமாறாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
7 ஆண்டுகளில் $10.6 பில்லியன் நஷ்டம்
இதனால் கடந்த 7 ஆண்டுகளில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு 10.6 பில்லியன் டாலர்கள் அளவு இழப்பை சந்தித்துள்ளது.
$1.4 பில்லியன் நஷ்டமாகும்
மேலும், இந்த நிதியாண்டிலும் அவை 1.4 பில்லியன் டாலர்கள் வரை நஷ்டத்தை சந்திக்க உள்ளன. கடந்த நிதியாண்டில் கிங்பிஷர் நிறுவனம் கடையை ஊதி மூடிய நிலையில், மற்றொரு உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.
முன்னேற வாய்ப்பில்லை
2015 துவக்கம் வரை இதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. இதனால், சர்வதேச வர்த்தகம் வலுவாக இருந்த போதிலும், உள் நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இந்த மாபெரும் நஷ்டத்தைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.
தள்ளாட்டம்
பெரும்பாலான விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமை இப்போதே பெரும் தள்ளாட்டத்துடன் தான் உள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்தைத் தவிர மற்ற உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு தங்கள் தொழில் மாடல்களை நிலை நிறுத்த மட்டுமே 1.6 பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது.