பெங்களூர்: இந்தியாவின் ஒவ்வொரு துறையும் தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இதில் வருமான வரி துறை மட்டும் என்ன விதிவிளக்காக இருக்க வேண்டுமா என்ன. வருமான வரி செலுத்துபவர்கள் அந்தத் துறையில் தங்கள் கணக்கு குறித்த பரிவர்த்தனைகளை எஸ்.எம்.எஸ்., இ-மெயில் வசதிகள் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
இது தொடர்பாக இத்துறையின் ஒரு உயர் அதிகாரி கூறியதாவது:
வங்கிகள் போலவே...
பெரும்பாலான வங்கிகள் ஏற்கனவே இதுபோல தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தகவல்களை அனுப்பி வருகின்றன. வரி செலுத்துபவர்களும் இதுபோலவே தங்கள் கணக்கு குறித்த தகவல்களை உடனடியாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை வருமான வரித் துறை மேற்கொண்டுள்ளது.
பெங்களூரில் மையம்
வருமான வரித் துறையின் 'சிஸ்டம்ஸ்' பிரிவு இதற்கான சாஃப்ட்வேர்களையும் ஹார்டுவேர்களையும் தனியாக நிறுவியுள்ளது. இதன் மத்திய செயல் மையம் இனி பெங்களூரில் செயல்படும்.
மொபைல் எண், இ-மெயில் கட்டாயம்
இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தங்களுடைய மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றையும் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று வருமான வரி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
உடனடி தகவல்
ஒருவருடைய வருமான வரி அலுவலகக் கணக்கில் வருமான வரி கட்டிய விவரம், வரி தாக்கல் செய்த விவரம், ரீஃபண்டுகள் குறித்த விவரம், வருமான வரி அறிக்கைகள் உள்ளிட்ட பல பரிவர்த்தனைகள் நடக்கும்போது, அவை உடனடியாக அவருடைய மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்ஸாகவும், இ-மெயிலாகவும் அனுப்பப்படும்.
வரி தாக்கல் பிரச்சனைகள்
வருமான வரி தாக்கல் தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அவை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும்.
மற்றப் பிரச்சனைகளும்...
இதைப் போலவே வரி தாக்கல் செய்பவர்களின் அனைத்துப் பிரச்சனைகளும் இந்தப் புதிய முயற்சியின் மூலம் வெகு விரைவாகத் தீர்த்துவைக்கப்படும்.


Click it and Unblock the Notifications