டெல்லி: சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சேமிப்புக்காகத் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வகை கார்களுக்கு ரூ.14,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெட்ரோல்/டீசல்களில் ஓடும் கார்களுக்கும் பசுமைக் கார்களுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசத்தைப் பொருத்து இந்த மானியம் இருக்கும்.
அரசின் திட்டம்
இது தொடர்பான ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ள மத்திய கனரகத் தொழில் அமைச்சகம், அதை நிதியமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது. மேலும் அதற்காண ஒப்புதல் விரைவில் கிடைக்கும் எனவும் இத்துறை தெரிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் கார்களுக்கு...
இத்திட்டத்தின் படி, முழுமையான எலெக்ட்ரிக் கார்களுக்கு 35% வரை மானியம் கிடைக்கும் என்றும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 கி.மீ. வரை செல்லும் இதர எலெக்ட்ரிக் கார்களுக்கு 25% வரை மானியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஹைப்ரிட் கார்களுக்கு...
அதேபோல், சாதாரண ஹைப்ரிட் கார்களுக்கு 15% வரையும், அவற்றைவிட அதிகத் தரம் வாய்ந்த ஹைப்ரிட் கார்களுக்கு 25% வரையும் மானியம் வழங்கப்படும் என்று தெரிகிறது.
உதாரணம்
நிதி அமைச்சகம் இந்தத் திட்டத்திற்கு ஓ.கே. சொன்னால், டொயோட்டா காம்ரி என்ற ஹைப்ரிட் வகைக் காரை ரூ.33 லட்சம் கொடுத்து வாங்கும்போது ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கும். பெட்ரோலில் ஓடும் இதே வகைக் காரின் மதிப்பு ரூ.28 லட்சமாகும்.
மார்க்கெட்டில் இப்போது...
தற்போது இந்தியச் சந்தையில் மஹிந்த்ரா & மஹிந்த்ராவின் ஸ்கார்ப்பியோ, டொயோட்டா ப்ரியஸ், டொயோட்டா காம்ரி ஆகிய ஹைப்ரிட் வகைக் கார்களும், மஹிந்த்ரா இ2ஓ போன்ற எலெக்ட்ரிக் வகைக் கார்களும் கிடைக்கின்றன. இதை வாங்கும் போது அதிகப்படியான பணத்தை மிச்சப்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications