மும்பை: சமீபத்தில் 28 நிறுவனங்களை வென்று ரிசர்வ் வங்கியிடம் இருந்து இந்தியாவில் புதிய வங்கி துவங்குவதற்காக மைக்ரோ நிதி நிறுவனமான (MFI) பந்தன் நிறுவனம் உரிமம் பெற்றது. இந்நிறுவனத்தை ஒரு முழுநேர வங்கியாக மாற்றுவதற்கு உலக வங்கியின் கிளை அமைப்பான சர்வதேச நிதி நிறுவனம் (IFC)ரூ.160 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள IFCன் தலைமை அலுவலகத்தில் IFC அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை பந்தன் நிறுவனத்தின் தலைவர் சந்திர சேகர் கோஷ் நடத்தியுள்ளார்.
ஐ.எஃப்.சியிடம் 11% பங்குகள்
ஏற்கனவே பந்தனில் 11 சதவீதப் பங்குகளை வைத்துள்ள IFC, இந்த நிதி நிறுவனத்தை வங்கியாக மாற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக கோஷ் கூறினார்.
7 ஆண்டு கடன்
பந்தனின் தற்போதைய டயர் 1 முதலீட்டுடன் (ரூ.1,200 கோடி), IFCன் டயர் 2 முதலீடும் (ரூ.160 கோடி) சேரவுள்ளது. MFIக்கு 7 ஆண்டு கடனாக இத்தொகையை IFC வழங்கவுள்ளது.
உலக வங்கியின் ஆர்வம்
பந்தனை ஒரு வங்கியாக மாற்றுவதில் உலக வங்கியும் ஆர்வம் கொண்டுள்ளதாக கோஷ் தெரிவித்தார். பந்தன் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உலக வங்கியின் இந்திய இயக்குநர் ஒன்னா ரூல் வரும் ஜூலை 10ம் தேதி வருகிறார்.
ரிசர்வ் வங்கி அனுமதி
பந்தன் நிறுவனத்தை இந்தியாவில் வங்கிச் அளிக்க கடந்த ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியின் முதற்கட்ட அனுமதி பெறப்பட்டு விட்டது. வங்கியாக மாற்றுவது தொடர்பான ஆலோசனைகளை Deloitte என்ற நிறுவனம் பந்தனுக்கு வழங்கி வருகிறது.
2015 அக்டோபருக்குள்...
அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் ஒரு வங்கியாக பந்தன் உருவெடுக்க உள்ளது. இந்த வங்கிக்கான முக்கிய அதிகாரிகளைப் பணியில் அமர்த்தும் வேலைகளும் தொடங்கியுள்ளன.