கோலாலம்பூர்: மலேசிய விமான நிறுவனமான ஏர் ஏசியா எக்ஸ் தனது நிறுவனத்தின் பிராந்திய விரிவாக்கத்திற்காக 50 ஏர்பஸ் ஏ330 நியோ விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்திலும் ஏர்ஏசியா கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து புதிய விமான சேவையை துவங்கியது. இந்த கூட்டு நிறுவனத்தின் வருகையால் இந்தியாவின் பிற விமான நிறுவனங்களுக்கும் போட்டி அதிகரித்துள்ளது.
ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் லண்டனில் நடந்த ஃபார்ன்பரோ ஏர்ஷோ நிகழ்ச்சியில் கையெழுத்திடப்பட்டது. இதன் மதிப்பு 13.8 பில்லியன் டாலர் ஆகும், ஆனால் மொத்த விற்பனை காரணத்தால் இந்நிறுவனம் மொத்த மதிப்பு 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை விலையை குறைக்கும்.
விநியோகம்
ஏர்பஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்த விமானங்களை ஏர்ஏசியா நிறுவனத்திற்கு வருகிற 2018-2024 ஆம் ஆண்டு இடைவேளையில் விநியோகம் செய்ய உறுதி அளித்துள்ளது.
மிகப்பெரிய வாடிக்கையாளர்
ஏர்ஏசியா நிறுவனம் ஏர் பஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒரு நிறுவனம். இந்நிறுவனத்திடம் மட்டும் சுமார் 536 ஏர்பஸ் விமானங்கள் உள்ளது குறிப்பிடதக்கது.
ஏர்ஏசியா எக்ஸ்
ஏர்ஏசியா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஏர்ஏசியா எக்ஸ் 2007ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிறுவனம் அசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 17 இடத்திற்கு விமான சரக்கு மற்றும் போக்குவரத்து சேவை அளித்து வருகிறது.