லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரட்டன் கோடீஸ்வரர்களில் ஒருவரான லக்ஷ்மி மிட்டல், பிரிட்டனில் உள்ள ஒரு பெரிய மலையை வாங்கவுள்ளார்.
இதனை எதிர்த்து, அந்த மலைப் பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். அந்த மலைத் தொடர் பணக்காரர்களின் விளையாட்டுக் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்று அவர்கள் கூக்குரல் எழுப்பி வருகின்றனர்.
ப்ளெங்காத்ரா மலைத் தொடர்
சுமார் 2,850 அடி உயரத்தில் இருக்கும் ப்ளெங்காத்ரா (Blencathra) மலைத் தொடர், பிரிட்டனின் கும்ப்ரியா ஏரி மாவட்டத்தில் நார்த்தர்ன் ஃபெல்ஸ் பகுதிக்கு மேல் அமைந்துள்ளது.
விற்பனைக்கு மலை வந்தது
இந்த மலைத் தொடரை விற்க அதன் சொந்தக் காரர் கடந்த மே மாதம் முடிவெடுத்து, ஏலத்திற்கு விட்டுள்ளார். அதன் ஏலத் தொகை 1.75 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.
மலை வாங்கும் மிட்டல்
இதைக் கேள்விப்பட்ட உலகின் மிகப் பெரும் இரும்புத் தயாரிப்புத் தொழிற்சாலையான ஆர்செலார்மிட்டல் நிறுவனத்தின் சிஇஓ மிட்டல், உடனே அந்த மலைத் தொடரை வாங்க விரும்பி, அதற்காக விண்ணப்பித்துள்ளார்.
விற்பனை ஏற்பு
ஏலத் தொகைக்கு அதிகமாகவே அவர் கொடுப்பதாக மிட்டல் கூறியுள்ளார். ப்ளெங்காத்ரா மலைத் தொடரின் சொந்தக்காரரும் மிட்டலின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
பலத்த எதிர்ப்பு
இதை எதிர்த்து அந்த மலைத் தொடர் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். தனியார்களின் கைகளில் சிக்கி அந்த மலைத் தொடர் பணக்காரர்களின் விளையாட்டுக் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்று அவர்கள் கூக்குரல் எழுப்பி வருகின்றனர்.
வெளிநாட்டினருக்கு விற்பதா?
அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு (மிட்டலுக்கு) அதை விற்கக் கூடாது என்று கூறி உள்ளூர் மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். இந்தப் பிரச்சனையை விரைந்து தீர்த்து வைக்க வேண்டுமென்று ஈடன் டிஸ்ட்டிரிக்ட் கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.