டெல்லி: இந்தியாவில் பல்வேறு உணவு பொருட்களை சந்தைப்படுத்தும் ஐடிசி நிறுவனம், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிகரெட்டின் மீதான கலால் வரி அதிகரிப்பின் எதிரொலியாக, தன்னுடைய கிளாஸிக் மற்றும் கோல்ட் ஃப்ளேக் ஃபில்டர் போன்ற சில சிகரெட் ப்ராண்டுகளின் விலையை பாக்கெட்டுக்குப் பத்து ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
"சில ஐடிசி சிகரெட் ப்ராண்டுகளின் விலை உயர்த்தப்பட்டதுடன், புதிய சரக்குகள் விரைவில் சந்தைக்கு வரும்" என ஐடிசி யின் செய்தித்தொடர்பாளர் பிடிஐ செய்திகளுக்குத் தெரிவித்தார்.
சிகரெட்
க்ளாஸிக் மற்றும் கோல்ட் ஃப்ளேக் ஃபில்டர் கிங்க்ஸ் சிகரெட்டுகளின் விலை பத்து சிகரெட்டுகள் கொண்ட பாக்கெட் ஒன்றுக்கு ரூபாய் 85 லிருந்து 95 ஆக மாற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
விலை உயர்வு
மேலும் ப்ரிஸ்டால் ஃபில்டர் சிகரெட்டின் விலை ரூபாய் 45 லிருந்து 47 ஆகவும், காப்ஸ்டன் ஃபில்டர் சிகரெட்டின் விலை 39 லிருந்து 47 ரூபாயாகவும், ஃப்ளேக் ஃபில்டெர் சிகரெட்டின் விலை 39 லிருந்து 48 ஆகவும் மேலும் ஃப்ளேக் எக்ஸெல் ஃபில்டர் சிகரெட் விலை 39 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
அடித்தது யோகம்
எனினும், நேவி கட் (ரூ 69), கோல்ட் ஃப்ளேக் ஃபில்டர் (ரூ 59), கோல்ட் ஃப்ளேக் ஃபில்டர் ப்ரீமியம் (ரூ 58) மற்றும் சிசர்ஸ் ஃபில்டர் மற்றும் ஃப்ளேக் ஃபில்டெர் ப்ரிமியம் (ரூ 50) ஆகியவற்றின் விலை மாற்றப்படாமல் வைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். அதை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கும் இது ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். இனி மற்ற வாடிக்கையாளர்கள் இந்த பிராண்டுகளுக்கும் மாற அதிகவாய்ப்புள்ளது.
காட்ஃப்ரெ ஃபிலிப்ஸ்
இந்நிறுவனத்தின் போட்டி நிறுவனமான காட்ஃப்ரெ ஃபிலிப்ஸ் (Godfrey Phillips) நிறுவனம் தன் நிறுவனப் பொருட்களின் விலை உயர்வைக் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
வரி உயர்வு
2014-15 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகரெட்டுகான கலால் வரிவிதிப்பை 11 சதவிகிதத்தில் இருந்து 72 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவே வரியை உயர்த்தியதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஐடிசி நிறுவனம்
ஐடிசி நிறுவனம் மிகுப்பயன்பாட்டுப் பொருட்கள் (எஃப்எம்சிஜி), ஹோட்டல்கள், காகிதத் தொழில் மற்றும் பெட்டகப் பொருட்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஆகியவற்றில் ஆர்வமுடன் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.