டெல்லி: உலக வங்கியின் துணை அமைப்பான பன்னாட்டு நிதி நிறுவனம், சுமார் 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் சம்ஹி ஹோட்டல் குழுமத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மின்சக்தி சேமிப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் வழி வகை செய்துள்ளது.
"உலக வங்கியின் உறுப்பினரான பன்னாட்டு நிதி நிறுவனம், இந்தியாவின் சம்ஹி ஹோட்டல் குழுமத்தில் முற்றிலும் மாற்றக்கூடிய கடன் பத்திரங்கள் மூலமாக முதலீடு செய்கின்றது. இந்த முதலீடு, இந்தியாவின் நடுத்தர ஹோட்டல் சந்தைகளில் உள்ள திறனை உயர்த்துவதோடு, வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மின்சக்தியை சேமிக்கும் ஹோட்டல் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்புகளை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும்" என உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
சம்ஹி ஹோட்டல்
இது பன்னாட்டு நிதி நிறுவனம் இந்தியாவிலுள்ள ஹோட்டல்களில் செய்யும் முதல் முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீடு, சுமார் 2600 வேலை வாய்ப்புகளை நொய்டா, அகமதாபாத், பெங்களுரு, ஹைதராபாத் மற்றும் புனேயில் தொடங்கப்படவுள்ள சம்ஹி ஹோட்டல்களில் உருவாக்க உதவும்.
வேலை வாய்ப்பு
இந்த 2600 பணியிடங்களில், 800 பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் தவணை முதலீட்டில், சம்ஹி தன்னுடைய கிரீன்பீல்ட் எனப்படும் பசுமை ஹோட்டல்களை முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் உருவாக்கி தன் தொழில் பரவலாக்கத்தை மேற்கொள்ளும்.
சுற்றுலா
"இந்த முதலீடு, இந்தியாவில் சுற்றுலா கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவும் முயற்சியாக இருக்கும்" என சம்ஹி ஹோட்டல் குழும நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் ஜக்கான்வாலா தெரிவித்தார். மேலும் இந்த முதலீடு சம்ஹி ஹோட்டல் குழுமத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெறிகளை வடிவமைக்கவும் உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறைந்த கட்டணம்
"பன்னாட்டு நிதி நிறுவனத்தின் முதலீடு, நடுத்தர மக்கள் தொகை பெருகிவரும் மற்றும் உள்நாட்டு பயணம் அதிகரித்து வரும் நாடுகளில், குறைந்த கட்டணம் கொண்ட ஹோட்டல்களுக்கு ஒரு ஆதரவாக இருக்கும்" என அந்த நிறுவனத்தின் விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் சேவைகளுக்கான ஆசிய பசிபிக் பகுதியின் இயக்குனர் விபுல் பிரகாஷ் தெரிவித்தார்.
270 ஹோட்டல் திட்டங்கள்
இந்த திட்டம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சிறிய மற்றும் நடுத்தர தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி பொருளாதார பரவலாக்கத்திற்கும் நிலையான வளர்ச்சிக்கும் உதவும் என அவர் தெரிவித்தார். உலகெங்கும், பன்னாட்டு நிதி நிறுவனம், சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்ககளை 270 ஹோட்டல் திட்டங்களில் முதலீடு செய்ய நிதி வசதி செய்துள்ளது.
கூட்டு முயற்சி
மாரியாட், ஸ்டார்வுட் ஹோட்டல்ஸ், அக்கார்ட் மற்றும் ஹயாத் போன்ற உலகளாவிய ஹோட்டல் நிறுவனங்களுடன் இணைத்து 3,700 அறைகளை உள்ளடக்கிய 25 ஹோட்டல்களை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ]