டெல்லி: அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியமான எப்.ஐ.பி.பி செவ்வாய்கிழமையன்று பாரதி ஷிப்யார்டு உள்ளிட்ட 21 நிறுவனங்களின் அந்நிய முதலீட்டுத் திட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதியளித்தது. ஆனால் சிஸ்டமா ஷியாம் நிறுவனத்தின் அந்நிய முதலீட்டு விண்ணப்பத்தை நிராகரித்தது.
நிதிச் செயலர் அரவிந்த் மாயாராம் தலைமையிலான இந்த அமைப்பின் கூட்டத்தில் இது போன்ற 35 திட்டங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.
பாரதி ஷிப்யார்டு
கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளை ஏற்கனவே கொண்டுள்ள இந்திய நிறுவனமான பாரதி ஷிப்யார்டின் பாதுகாப்புத் துறை பணிகளுக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வெரிசோன் நிறுவனம்
இதனிடையில், வெரிசோன் நிறுவனம் தன்னுடைய வெளிநாட்டு தலைமை நிறுவனத்தின் பங்களிப்பை 74 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக உயர்த்த செய்திருந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இண்டஸ்இந்த் வங்கி
இந்திய தனியார் வங்கிகளில் ஒன்றான இண்டஸ்இந்த் வங்கியின் வெளிநாட்டு முதலீடு தொடர்பான விண்ணப்பத்திற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
பிற நிறுவனங்கள்
அனுமதி வழங்கப்பட்ட பிற அந்நிய முதலீட்டுத் திட்டங்களில் பாதுகாப்புத் துறையில் கைனிகோ கமான் காம்பொசிட்ஸ் இந்தியா லிமிடெட் (Kineco Kaman Composites India) மற்றும் நிதிச் சேவைகள் துறையில் எ.என்.இசட் கேப்பிடல் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
சிஸ்டமா ஷியாம் டெலிசர்விசஸ்
எனினும் தொலை தொடர்பு நிறுவனமான சிஸ்டமா ஷியாம் டெலிசர்விசஸ் நிறுவனத்தின் அந்நிய முதலீட்டைத் தற்போதுள்ள 74 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரிக்கும் திட்டத்திற்கான அனுமதியை எப்.ஐ.பி.பி மறுத்துள்ளது. இந்நிறுவனம் எந்த அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்க உள்ளது என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.
சிஸ்டமா ஷியாம் - ரஷ்யா
ரஷ்ய நிறுவனமான சிஸ்டமா ஜேஎஸ்எப்சி சிஸ்டமா ஷியாம் நிறுவனத்தில் 56.68 சதவிகிதமும், ரஷ்ய அரசு 17.14 சதவிகிதமும், 0.13 சதவிகிதம் பிற அந்நிய அமைப்புகளும் முதலீடுகளைக் கொண்டுள்ளன.