பெங்களுரூ: இன்றைய நவினமயமான உலகத்தில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி அபரிதமானது. அதிலும் இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் பூதாகரமாக வளர்ந்த ஒன்று, இத்தகைய வளர்ச்சியை கண்டு வியந்து இந்திய சந்தையில் பல அன்னிய நிறுவனங்கள் குவிந்தது, இதில் முக்கியமாக அமேசான் மற்றும் ஈபே ஆகியவை ஆகும்.
இந்நிலையில் இத்துறை ஜாம்பவான் என போற்றப்படும் அலிபாபா நிறுவனம் சீனாவில் இருந்து அமெரிக்காவில் வரையில் ஆதிக்கம் செலுத்து வரும் இந்த நேரத்தில், இந்தியாவில் குதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் டீல் செய்து வருகிறது.
சீன பிரதமர் ஜி ஜின்பிங்
புதன்கிழமை பல குழப்பங்கள் மற்றும் கூச்சலுக்கு மத்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரவேற்றார். ஜி ஜின்பிங் அவர்களது மூன்று நாள் சுற்று பயணத்தில் பல முக்கிய திட்டங்கள் இருந்தாலும், அலிபாபா நிறுவனத்தின் முதலீடு முக்கியமாக கருதப்படுகிறது. (பொதுவாக அலிபாபா சீன அரசின் நிறுவனமாகவே கருதப்படுகிறது...)
அலிபாபா
பன்னாட்டு விற்பனையாளர் இணைக்கும் இந்நிறுவனம் இந்தியாவில் இறங்கினால், இந்திய சில்லறை வணிகத்தில் முன்னோடியாக திகழும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக (தலைவலி) இருக்கும்.
ஸ்னாப்டீல்
அலிபாபா நிறுவனம், ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதற்கட்டமாக சுமார் 300 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனத்தில் டாடா குழுமத்தின் ரத்தன் டாடா, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி ஆகியோர் முதலீடு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
அமெரிக்காவில் அலிபாபா..
இன்றைய நிலையில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் முன்னோடியாக திகழும் நாடு அமெரிக்கா தான். சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற அலிபாபா சில நாட்களில் விற்பனை சூடு பிடிக்க துவங்கியது. சில வருடங்களில் முன்னணி நிறுவனங்களான அமேசான் மற்றும் ஈபே நிறுவனத்திற்கு இணையாக உருவெடுத்தது.
பங்கு சந்தை
அமெரிக்க பங்கு சந்தையில் இறங்க அலிபாபா பல கடுமையான முயற்சிகளுக்கு பின் ஒப்பதல் பெற்றது. தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 10 இலட்சம் கோடியாக மதிப்பிடபட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தை அடுத்து அமெரிக்க பங்கு சந்தையில் அதிகப்படியாக சந்தை மதிப்பு பெற்றுள்ள ஒரு டெக்னாலஜி நிறுவனம் ஆகும்.