டெல்லி: இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கேற்ப மாருதி சுசுகி நிறுவனம், இந்தியாவில் உள்ள போட்டி மற்றும் உற்பத்திச் சூழ்நிலைகளுக்கு எதிராக உள்ள காரணிகளை உடனடியாக நீக்கினால், இந்தியா உலகின் மிகப்பெரும் கார் உற்பத்தியாளராக வர திறனும் வாய்ப்பும் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மேக் இன் இந்தியா
"இந்தியாவில் உற்பத்தி செலவுகள் அரசின் பல்வேறு நடைமுறை, கட்டுப்பாடுகள், சட்ட நடைமுறைகள் மற்றும் கொள்கைகளால் உயர்ந்துள்ளன" என அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கெனிச்சி ஆயுகாவா இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
தடைகளே நீங்கும்
இந்தியா வர்த்தகம் செய்ய எளிமையான நாடு அல்ல என்று குறிப்பிட்ட அவர் "பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் போட்டி மற்றும் உற்பத்தியில் உள்ள பல்வேறு தடைகளை விரைவில் அகற்றப்படும் என முழுமையாக நாங்கள் நம்புகிறோம்" எனவும் இந்தியா உலகின் உற்பத்தியல் மிகவும் போட்டித்திறன் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக வரும் எனவும் தெரிவித்தார்.
மாருதி சுசுகி நிறுவனம்
பிரதமர் நரேந்திர மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டத்தை வரவேற்ற அவர், மாருதி சுசுகி நிறுவனம் 1983ஆம் ஆண்டில் முதன் முதலில் இந்தியாவில் உற்பத்தியைத் துவங்கிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
ஒசாமு சுசுகி
"கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய சந்தை மற்றும் நாட்டின் முக்கியத்துவத்தையும் மிக உயர்ந்த தரம் வாய்ந்த உற்பத்தி இங்கு சாத்தியம் என்பதையும் சுசுகி மோட்டார் நிறுவனம் அறிந்திருந்தது" என அந்நிறுவன தலைவர் ஒசாமு சுசுகி தெரிவித்தார். உலக அளவில் சுசுகி குழுமத்தின் வர்த்தக முயற்சிகளில் மாருதி சுசுகி வெற்றிகரமான ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
தயாரிப்பு
உலகின் பிற நாடுகளில் தயாரிப்புகளின் செலவை ஒப்பிடுகையில், இந்தியாவில் மாருதி சுசுகி தயாரிப்புகளின் செலவுகள் குறைவு எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்றுமதி
இதனால், 1986 ஆம் ஆண்டு முதல் மாருதி நிறுவனம் கார்களை ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கியது. 1994 ஆம் ஆண்டு சுசுகி ஜப்பான், இந்தியாவை தனது ஜென் ரகக் கார்களின் உற்பத்தி மையமாக ஆக்கி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது.
உதிரிபாகங்கள் தயாரிப்பு
1983 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மாருதி நிறுவனம் சிறப்பான உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய சிறந்த முயற்சிகளை செய்துவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.