டெல்லி: நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தன்னுடைய வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டுகளை உபயோகிப்பதற்கான கட்டணங்களைத் திருத்தி அமைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்கு வருவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்கள் ஏடிஎம்களிலேயே அதிக வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் அதிக சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கில் அதிக பேலன்ஸ் தொகை வைத்திருப்பவர்களுக்கும் சிறப்புச் சலுகைகள் உள்ளன.
ரூ.25,000 வரை பேலன்ஸுக்கு...
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.25,000 வரை பேலன்ஸ் வைத்திருந்தால், அவர்கள் மாதத்திற்கு 4 முறை வங்கிக் கிளைகளுக்குச் சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவர்கள் மாதத்திற்கு 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 முறை பிற வங்கி ஏடிஎம்களிலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
ரூ.25,000க்கு மேல்...
ஒவ்வொரு மாதமும் ரூ.25,000க்கு மேல் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள், எஸ்பிஐ ஏடிஎம் நெட்வொர்க்கை எந்தவிதக் கட்டணமுமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 3 முறை மட்டுமே கட்டணமின்றி பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
ரூ.1 லட்சத்துக்கு மேல்...
மாதம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பேலன்ஸ் வைத்துள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், நாடு முழுவதிலும் உள்ள ஏடிஎம்களில் இலவசமாகப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
கிளைக்கு வராதவர்களுக்கு...
மேலும், மாதத்தில் ஒருமுறை கூட வங்கிக் கிளைக்கு வந்து பரிவர்த்தனை செய்யாமல், ஏடிஎம்களை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி மாதத்திற்கு 9 முறை இலவசமாக பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம். இதுவரை இதன் அளவு மாதத்திற்கு 5 முறை மட்டுமே!
பெரு நகரங்களில் மட்டும்...
இந்தப் புதிய ஏடிஎம் வரம்புகள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற பகுதிகளில் எப்போதும் போல் மாதத்திற்கு 5 முறைதான்.
ஏடிஎம் கட்டணம்
ஏடிஎம் பயன்படுத்துவதில் இந்த மாத வரம்புகளுக்கு அதிகமாகப் பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு எஸ்பிஐ ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் ரூ.5ம் மற்றும் ஒவ்வொரு பிற வங்கி பரிவர்த்தனைக்கும் ரூ.20ம் கட்டணங்களாக வசூலிக்கப்படும்.
நவம்பர் 1 முதல்...
ரிசர்வ் வங்கி உத்தரவின் படி இந்தப் புதிய ஏடிஎம் கட்டணங்களை எஸ்பிஐ நிர்ணயித்துள்ளது. இக்கட்டணங்கள் வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
12.59 கோடி கார்டு வாடிக்கையாளர்கள்
நாடு முழுவதும் 12.59 கோடி பேர் எஸ்பிஐ பண பரிவர்த்தனை கார்டுகளை வைத்துள்ளார்கள். இவர்களில் 31% பேர் (40.9 கோடி) டெபிட் கார்டுகள் வைத்துள்ளனர்.
1.66 லட்சம் ஏடிஎம் மெஷின்கள்
மேலும், எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 44,929 ஏடிஎம் மையங்களையும், 1.66 லட்சம் ஏடிஎம் மெஷின்களையும் நிறுவியுள்ளது.
41% எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
இதுதவிர, நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைகளில் 41% எஸ்பிஐ வாடிக்கையாளர்களால் தான் நடைபெறுகிறது.