மும்பை: இந்தியாவின் ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனங்கள் இந்தியாவில் இரண்டாவது மற்றும் முன்றாவது கட்ட நகரங்களை அடைய மொபைல் ஷாப்பிங் தளத்தை பயன்படுத்த உள்ளது. இந்தியாவில் நகரங்களை விட கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் தான் அதிகம், அங்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் தற்போது குறிப்பிடதக்க அளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 930 மில்லியன் மொபைல் மற்றும் டேப்லெட் ஷாப்பிங் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் நடப்பு நிதியாண்டில் இச்சந்தையில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 84 சதவீதம் உயர்ந்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் சந்தை..
இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தை போலவே மொபைல் வர்த்தகமும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனை கைபற்ற இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான ஸ்னாப்டீல், பிளிப்கார்ட், மின்திரா மற்றும் பல நிறுவனங்கள் மொபைல் ஆப்ளிகேஷன்களை வெளியிட்டுள்ளது. இதில் ஆன்லைன் பஸ், ரயில், விமான டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவையும் அடங்கும்.
இண்டர்நெட் பயன்பாடு
இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்ததற்கு முக்கிய காரணம், ஸ்மார்ட்போன்களின் வருகை. மேலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் இரண்டாவது மற்றும் முன்றாவது கட்ட நகரங்களையும் அடைந்துள்ளது. இதனால் இச்சந்தையில் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
கடைகள்
மேலும் இந்தியாவில் இரண்டாவது மற்றும் முன்றாவது கட்ட நகரங்களில் பெரு நிறுவனங்கள் தங்களின் கடைகளை திறப்பதில்லை, குறிப்பாக பன்னாட்டு ஆடை நிறுவனங்கள். எனவே மொபைல் இணைப்பின் மூலம் அவர்கள் எத்தகைய பிராண்ட் ஆடைகள் மற்றும் இதர பொருட்களையும் மொபைல் ஷாப்பிங் மூலம் எளிதாக பெற முடியும்.
ஸ்னாப்டீல்
இதுகுறித்து ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைவர் குனால் கூறுகையில்"எங்கள் நிறுவனத்திற்கு வரும் 60 சதவீதம் ஆர்டர்கள் மொபைல் தளத்தில் இருந்து கிடைத்ததவை, அடுத்த ஒரு வருடத்தில் இதன் அளவு 75 சதவீதமாக அதிகரிக்கும், அடுத்த 3 வருடத்தில் 90 சதவீதமாக அதிகரிக்கும்" என அவர் தெரிவித்தார்.
70 சதவீத வளர்ச்சி
மேலும் இகாமர்ஸ் சந்தை 2015ஆம் ஆண்டில் 70 சதவீதம் வளர்ச்சி பெற்று சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலராக உயரும் என ஐடி ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது.