டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட், இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது, இது மறுக்க முடியாத உண்மை. அதேபோல ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா அவர்கள் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் திட்டத்திலும் நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு ஏற்ப பல வளர்ச்சி திட்டங்கள் இருந்தது.
இதைதொடர்ந்து 2015-16ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் மத்திய அரசு தற்போதே துவங்கியுள்ளது. இப்பணியின் முதல்கட்டமாக நிதி அமைச்சகத்தின் சிறப்பு குழு செலவு பிரிவுச் செயலர், நீதித்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளது.
2015-16 பட்ஜெட்
2015ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்," 2015ஆம் ஆண்டின் பட்ஜெட் முற்றிலும் புதுமையாக இருக்கும்" என தெரிவித்தார். மேலும் புதிய மற்றும் புதுமையான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதிகாரிகளுக்கு அறிவுரை
மேலும் மோடி அவர்கள் நாட்டின் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களை சந்தித்து, 2015 பட்ஜெட்டுக்கான திட்டங்கள் அனைத்தும் வளர்ச்சி மற்றும் லாபம் தரும் திட்டங்களாக இருக்கும் வேண்டும் எனவும், அன்னிய முதலீட்டு ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பட்ஜெட் தயாரிப்பு பணிகள்
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறை அதிகாரிகளையும் பட்ஜெட் தீட்டும் பணிகளை உடனடியாக துவங்கவும், புதிய திட்டங்கள் அனைத்தும் 2015ஆம் நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் துவங்க வேண்டும் என்றும், இதற்கான நிதி ஒதுக்கீடுகள் விரைவாக செயல்படுத்தவும் உத்திரவிட்டுள்ளார்.
விரைவான தீட்டங்கள்
ஏப்ரல் 1ஆம் தேதி துவங்க உள்ள புதிய நிதியாண்டின் பட்ஜெட், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும். மேலும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பிப்ரவரி மாதத்திற்கு பிறகே நடக்கும். எனவே வரைவாக பட்ஜெட் திட்டமிடும் போது நிதி ஒதுக்கீடுக்கான தாமதங்கள் தடுக்க முடியும், புதிய திட்டங்களும் விரைவாக செயல்படும் என மோடி அவர்கள் தெரிவித்தார்.
நிதி அமைச்சகம்
மேலும் 2014-15-ம் நிதி ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் மதிப்பீடு மற்றும் 2015-16-ந் நிதி ஆண்டுக்கான செலவுத் தொகை ஆகியவற்றை நிதி அமைச்சகம் தயாரிக்கும். பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகளை சந்திக்கும் பணி டிசம்பர் 12-ம் தேதி வரை தொடரும்.