மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மும்பையில் ரியல் எஸ்டேட் விலை விண்ணைத் தொட்டுள்ள போதிலும் அங்கு தான் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
துபாயில் வரும் டிசம்பர் மாதம் இந்திய ப்ராபர்டி ஷோவை நடத்தும் சுமன்ஸா எக்சிபிஷன்ஸ் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தியது.
இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 35 சதவீதம் பேர் மும்பையில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மும்பையை அடுத்து பெங்களூரில் முதலீடு செய்ய விரும்புவதாக 24.13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.
இந்த கணக்கெடுப்பில் அமீரகத்தில் வாழும் 22 ஆயிரத்து 300 இந்தியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் எந்த இந்திய நகரத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், எந்த வகையான சொத்துக்களை, எந்த நேரத்தில், எவ்வளவு பட்ஜெட்டில் வாங்க விரும்புகிறார்கள் என்பதை அறியவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இது குறித்து சுமன்சா எக்ஸிபிஷன்ஸ் தலைவர் சுனில் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
இந்திய ரியல் எஸ்டேட் துறை முதலீட்டாளர்களை தொடர்ந்து ஈர்த்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மக்கள் தங்களின் பயன்பாட்டுக்காக சொத்துக்கள் வாங்குவார்கள். ஆனால் தற்போது முதலீடுக்காக வாங்குகிறார்கள்.
மும்பையில் புதிதாக கட்டிடங்கள் கட்ட நிலத்தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் நவி மும்பை உள்ளிட்ட பகுதிகள் தான் மும்பைக்கு மாற்றாக உள்ளது. இந்தியாவில் பெங்களூர் ரெசிடென்ஷியல் மற்றும் வர்த்தக சந்தையில் வளர்ந்து வரும் நகரம் ஆகும். அண்மை காலமாக அது பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது. பெங்களூரில் முதலீடு செய்ய தற்போது சிறந்த நேரம் என்றார்.