டெல்லி: கடுமையான நஷ்டத்தில் தவித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பணியாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதனால் இந்நிறுவனத்தின் செயல்பாடு கடுமையாக பாதித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க இந்நிறுவனம் சில உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உதவியை நாடியது, ஆனால் இம்முயற்சி பயன் அளிக்கவில்லை. இந்நிறுவனத்தின் நிலையை உணர்ந்த சுமார் 125 பைலட்கள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
54 பைலட்கள்
இந்த 125 பைலட்களில் 54 பேர் புதிய பணிகளுக்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போட்டியாளரான ஜெட்ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
ஜெட்ஏர்வேஸ்
புதிய பணிகளுக்காக விண்ணப்பித்த 54 பணியாளர்களில் 40 பேருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அவர்களது பணியிடங்களை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள பணியாளர்கள் இண்டிகோ நிறுவனத்தின் பணியிட நியமான ஆணைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
சந்தேகம்
மேலும் பணியாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் இத்துறையில் நிறுவனங்களின் மத்தியிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த கடுமையான நிதி நெருக்கடியில் தப்பித்து மீண்டு வரும் என்னும் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது விமான போக்குவரத்தை அதிகளவில் குறைத்துக் கொண்டதால், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நேற்று சுமார் 186 ஸ்லாட்டுகளை நீக்கியுள்ளது. மேலும் இயக்குநரகம் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பணியாளர்களுக்கு சம்பளத்தை அளிக்குமாறு அறிவுறுத்துள்ளது.
85 சதவீத பணியாளர்கள்
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்புக்கு பதில் அளித்த ஸ்பைஸ்ஜெட் 85 சதவீத பணியாளர்களுக்கு நவம்பர் மாத சம்பளத்தை கடந்த வாரம் அளிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு 15ஆம் தேதிக்குள் அளிப்பதாகவும் உறுதி செய்துள்ளது.
1,500 கோடி ரூபாய்
மேலும் டிசம்பர் 15ஆம் தேதி இந்நிறுவனத்தின் நிலுவையில் உள்ள செயல்பட்டு கட்டணமான 1,500 கோடி ரூபாயை செலுத்தவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நஷ்டம்
இந்நிறுவனம் கடந்த 5 காலாண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டில் இந்நிறுவனம் 310 கோடி நஷ்டத்தை சந்தித்தது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 559 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடதக்கது. இதில் இருந்து என்ன தெரிகிறது??? அடுத்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கண் முன்னே தெரிகிறது.