டெல்லி: 2014 ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் சீர்திருத்த மசோதாவில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து வரும் தொழிலாளர் நலனுக்கான நாடாளுமன்ற குழு, தொழிற்ச்சாலையின் வளாகத்திலேயே தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் களைய நீதிமன்றங்களை அமைக்க முடிவுசெய்துள்ளது.
"தொழிற்சாலை நிர்வாகங்கள் தொழிலாளர்களின் நலனைப் பேணுவதில் சட்ட வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்" என்று அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் அந்த குழு தெரிவித்ததுடன் திட்டமிடப்பட்டுள்ள மாறுதல்களை அரசு "மிகுந்த கவனத்துடன் சீர்செய்யப்படவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.
இதன் மூலம் தொழிலாளர் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் அளிப்பதுடன் அவர்களில் வளர்ச்சி மற்றும் வேலைத்திறன் ஆகியவை உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
பிஜேபி-யின் தலைவர்களுள் ஒருவரான விரேந்திர குமார் தலைமையிலான குழு தொழிலாளர்கள் அந்தந்த தொழிற்ச்சாலை சார்ந்த தொழிலாளர் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் எனவும், தொடர்ந்த இடைவெளியில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின்படி விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பின்பற்றப் படுகின்றனவா என ஆராய்ந்து முறைகேடுகளைத் தவிர்க்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொழிற்ச்சாலைகள் விதிகள்படி தற்போதுள்ள குறைந்தபட்ச தொழிலாளர்கள் எண்ணிக்கையை, மின்சாரம் உபயோகிக்கும் ஆலைகளில் 10இல் இருந்து 15ஆக உயர்த்தவும் மற்றும் மின்சாரம் உபயோகிக்காத ஆலைகளில் 20இல் இருந்து 40ஆக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அந்தக் குழு தெரிவித்தது.
இதில் தளர்வு மற்றும் மாறுதல்களை செய்துகொள்ள சில மாநில அரசுகள் விடுத்தக் கோரிக்கைகள் குறித்து தொழிலாளர் துறையின் சார்பில் தரப்பட்ட காரணத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனெனில் தற்போதுள்ள பட்டியலின்படி மாநில அரசுகள் தொழிற்ச்சாலை சட்டங்களில் தங்களுக்குத் தேவைகேற்ப மாறுதல்களைச் செய்துகொள்ள அதிகாரம் தரப்பட்டுள்ளது.
"குறைந்தபட்ச தொழிலாளர் எண்ணிக்கையை உயர்த்தக் கோரும் இந்த மத்திய சட்டம் தேவையற்றது என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று" என மேலும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் எழுபது சதவிகிதத்திற்கு மேற்பட்ட தொழிற்ச்சாலைகள் சட்ட வரம்பிற்கு வெளியில் தள்ளப்பட்டு தொழிலாளர்கள் வேலை செய்யும் நிபந்தனைகள், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்ற ஒவ்வொரு காரணத்திற்காகவும் ஆலை நிர்வாகங்களை நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்படும் என தொழிற்சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
வேலைநேரத்தினை 10.5 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக விரிவாக்கம் செய்வது தொடர்பான மாறுதலுக்கு, இது போன்ற மாறுதல்கள் தொழிலாளர்களை நிர்வாகங்கள் துன்புறுத்துவதற்கு வாய்ப்பாக அமையலாம் எனவும் அவர்கள் தகுந்த ஊதியமின்றி நெடுநேரம் தொழிற்ச்சாலையில் இருக்க நிர்பந்திக்கப்படலாம் எனவும் கருதி இந்த கவலைக்குரிய மாறுதலை தொழிலாளர்துறை இந்த விஷயத்தை மறு ஆய்வு செய்யுமாறு குழு வலியுறுத்தியுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்துள்ள இந்த மிக முக்கிய தொழிலாளர் சீர்திருத்த மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்களால் விளக்கங்கள் கோரப்பட்டு சபாநாயகரால் குழுவிற்கு ஒப்படைக்கப்பட்ட இது ஆய்வு செய்யப்பட்டு மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நிலைக் குழு அறிக்கையை வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதிக்குள் சமர்பிக்க கால அவகாசங்கள் நீட்டிக்கக் கோரியுள்ளது.