மும்பை: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்தியாவில் அளிக்கப்படும் 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. 1 மெகாஹெட்ஸ் 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு 2,720 கோடி ரூபாய் தொகையை நிர்ணயம் செய்துள்ளதாக டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த புதிய விலை 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஏல விலையை விட 18 சதவீதம் அதிகமாகும், இதேபோல் 1800 மெகாஹெட்ஸ் பேண்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட 23 சதவீதம் அதிகமாகும்.
இதன் விலை உயர்வால் தொலைதொடர்பு நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்கப்படும் சேவை கட்டணத்தையும் உயர்த்தும்.
மேலும் புதிய விலை நிர்ணயத்திற்கான பரிந்துரையை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அளித்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட அலைகற்றையில், 2100 மெகாஹெட்ஸ் அளவு ஸ்பெக்ட்ரத்தை அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டது, இதன் மூலம் அடுத்த முறை ஏலத்தில் டிராய் அமைப்பு இந்த ஸ்பெக்ட்ரத்தை 1800 மற்றும் 900 மெகா ஹெட்ஸ் என்ற பிரிவில் விற்க உள்ளது.
இதன் மூலம் முந்தைய ஏலத்தை விட அதிகளவிலான அலைகற்றையை ஏலம் விட முடியும் என டிராய் தெரிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூறுகையில்,"இந்தியாவில் மொபைல் பயன்பாடு கடந்த 3 வருடத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வளர்ந்துள்ளது, எனவே தற்போது உள்ள ஸ்பெக்ட்ரம் அளவு போதாது." என தெரிவித்துள்ளார்.