மும்பை: 2015ஆம் ஆண்டின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று மும்பை பங்கு சந்தையில் 325 புள்ளிகள் உயர்வுடன் 27,836.09 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் வங்கி, எண்ணெய், உலோகம், மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்களின் வர்த்தகம் சிறப்பாக உள்ளது.
மும்பை பங்கு சந்தையை போல நிஃப்டியிலும் இன்று 102.45 புள்ளிகள் உயர்வுடன் 8,386.45 புள்ளிகள் என்ற நிலையை அடைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் தெய்வு ஏற்பட்டாலும், இன்று பங்கு சந்தை மீட்சி அடைந்துள்ளது.
பொருளாதார நிலை
நாட்டின் பொருளாதார நிலை ஸ்திர தன்மையை அடைந்துள்ளதால், சந்தையில் பெரு நிறுவன முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரை அதிகளவிலான பணத்தை முதலீடு செய்து வருகின்றனர்.
தனியார் வங்கித்துறை
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் தனியார் வங்கிகள் பெரும் பங்கு வகுக்கிறது, டிசம்பர் 31ஆம் தேதி 4 பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய தலைவர்களின் நியமனம், தனியார் வங்கிகளுக்கு கடுமையான போட்டியை அளித்துள்ளது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் தனியார் வங்கிளான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியைவை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.
உற்பத்தி துறை
மேலும் ஹெச்எஸ்பிசி வெளியிட்ட இந்தியாவின் உற்பத்தி துறை அறிக்கையில், நாட்டின் உற்பத்தியின் வளர்ச்சி கடந்த 2 வருடங்களில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் கடந்த டிசம்பர் மாத்தில் இந்திய நிறுவனங்களுக்கு அதிகளவிலான ஆர்டர்கள் குவிந்ததாகவும் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவும் பங்குசந்தையில் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளது.
அன்னிய பங்கு சந்தை முதலீடு (FPI's)
வியாழக்கிழமை மட்டும் அன்னிய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் 18.20 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பெற்றுள்ளதாக பங்கு சந்தை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆசிய சந்தைகள்
புத்தாண்டையொட்டி ஆசிய சந்தைகள் அனைத்தும் குறைவான அளவிலான வர்த்தகத்தை பதிவு செய்திருந்தது. சிங்கப்பூர், ஹாங்காங், இண்தோனேஷியா மற்றும் தென் கொரியா சந்தைகள் மட்டும் 0.01% முதல் 0.72% அளவிலான உயர்வை அடைந்தது.
சீனா, ஜப்பான்
மேலும் சீனா, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இன்று விடுமுறையின் காரணமாக, பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.