டெல்லி: பன்னாட்டு விமானச் சேவையில் டாடா குழுமத்துடன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் இணைந்து இந்தியாவில் விஸ்தாரா என்னும் புதிய நிறுவனம் ஜனவரி 9ஆம் தேதி தனது சேவையை துவங்கியது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை போல் அதிரடி சலுகைகளை வழங்காத காரணத்தால் இந்நிறுவனம் துவங்கிய ஒரு மாத காலத்திலேயே பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளனர். இதனால் ஜனவரி மாதத்தில் இந்நிறுவனத்தின் பயணிகள் எண்ணிக்கை 45.4 சதவீதமாக குறைந்தது.
பயணிகள் எண்ணிக்கை
ஜனவரி மாதத்தில் விஸ்தாரா நிறுவனத்தின் பயணிகள் எண்ணிக்கை இந்தியாவில் இருக்கும் அனைத்து விமான நிறுவனங்களை விட குறைவாக 45.4 சதவீத அளவை பதிவு செய்திருந்தது. இந்நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படும் ஜெட் ஏர்வேஸ் 87 சதவீத பயணிகளுடனும், ஏர் இந்தியா நிறுவனம் 82.4 சதவீத பயணிகளுடன் பறந்தது குறிப்பிடதக்கது.
ஏர்ஏசியா
உலக சந்தைகளை கைபற்ற டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்த நிலையில், உள்நாட்டு சந்தையை கைபற்ற டாடா குழுமம் மலேசியாவின் ஏர்ஏசியா நிறுவனத்துடன் இணைந்தது. ஏர்ஏசியா டாடா கூட்டணி சேவையில் பயணிகள் எண்ணிக்கை 76.3 சதவீதமாக உள்ளது குறிப்பிடதக்கது. டிசம்பர் மாதத்தில் இதன் அளவு 80 சதவீதமாக இருந்தது.
பிற நிறுவனங்கள்
இந்நிலையில் இண்டிகோ 85.2%, ஜெட் ஏர்வேஸ் 87.4%, ஏர் இந்தியா 82.4%, ஸ்பைஸ்ஜெட் 80.0%, கோ ஏர் 79.2%, ஏர்ஏசியா 76.3%, ஏர் கோஸ்டா 76.5%, விஸ்தாரா 45.4% பயணிகளை கொண்டு பறந்தது.
மொத்த பயணிகள் எண்ணிக்கை
2015ஆம் ஆண்டின் ஜனவரி மாத்தில் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 21.3 சதவீதம் அதிகரித்து மொத்தம் 6.2 மில்லியன் பயணிகளுக்கு விமான போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதன் எண்ணிக்கை 5.1 மில்லியனாக இருந்தது.
ஜனவரி- மார்ச் மாதங்கள்
பொதுவாக ஜனவரி- மார்ச் மாதங்களில் விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும், இக்காலகட்டங்களில் விமான நிறுவனங்கள் பயணிகள் எண்ணிக்கையை உயர்த்த அதிகப்படியான சலுகையை அறிவிக்கும். விஸ்தாரா நிறுவனம் இத்தகைய சுலுகை மற்றும் தள்ளுபடிகளை அதிகம் அளிக்காத காரணத்தினால் இந்நிறுவனத்தின் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
3வது நிறுவனம்
இந்தியாவில் பல விமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், முழுமையான சேவை அளிக்கும் நிறுவனங்கள் இரண்டு மட்டுமே, அவை ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ். இதை தொடர்ந்து தற்போது இப்பட்டியலில் விஸ்தாரா நிறுவனம் இணைந்துள்ளது.
விஸ்தாரா
ஏர் இந்தியா நிறுவனமே டாடா குழுமத்திடம் சுருட்டப்பட்ட விமானங்களின் மூலம் உருவானது என ஒரு கதை உண்டு, இந்நிலையில் டாடா குழுமம் ஏர்ஏசியா நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் உள்நாட்டு விமானச் சேவையிலும், சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் இணைந்ததன் மூலம் பன்னாட்டு விமான போக்குவரத்தில் கால் தடம் பதித்தது குறிப்பிடதக்கது.
விஸ்தாரா-வுக்கு போட்டி
இந்த புதிய நிறுவனத்திற்கு இத்துறையில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா மிகப்பெரிய போட்டியாக உள்ளது. மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பன்னாட்டு விமான சேவையில் ஏதிஹாட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் விஸ்தாரா-வுக்கு போட்டி கடுமையாக உள்ளது.
பங்கீடு
இந்த நிறுவனத்தின் பங்குகளில் டாடா சன்ஸ் நிறுவனம் 51 சதவீத பங்குகளும், மீதமுள்ளவை சிங்கப்பூர் நிறுவனம் வைத்துள்ளது.