சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவு சரிந்ததன் காரணமாக பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையின் அளவு சுமார் 6.85 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வர்த்தக பற்றாக்குறையின் அளவு 8.3 பில்லியன் டாலராக இருந்தது.
வர்த்தக பற்றாக்குறை
ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பில் இருக்கும் வித்தியாசம்தான் வர்த்தக பற்றாக்குறை.
வர்த்தக பற்றாக்குறையின் அளவு 0 சதவீதமாக இருக்கும் பட்சத்தில் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம நிலையில் இருப்பதாக அர்த்தம். இதன் அளவு 0%-ஐவிட அதிகமாக இருந்தால் இறக்குமதி அதிகமாக இருப்பதாகவும், குறைவாக இருந்தால் ஏற்றுமதி அதிகமாகவும் இருப்பதாக பொருள்.
ஏற்றுமதியில் சரிவு
நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து 3 மாத காலமாக ஏற்றுமதி சரிவுப் பாதையிலேயே உள்ள நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதியின் அளவு சுமார் 15.02 சதவீதம் குறைந்து 21.54 பில்லியன் டாலராக உள்ளது. அதற்கு முன் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி 11.12 சதவீதம் குறைந்திருந்தது.
மொத்த ஏற்றமதி
2014ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாத காலகட்டத்தில் இந்தியா 286.58 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றமதி செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஏற்றுமதியின் இலக்கு 340 பில்லியன் டாலர்.
ரூபாய் மதிப்பு
பிப்ரவரி மாதத்தில் மோசமான ஏற்றுமதிக்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 2 சதவீதம் சரிவை தழுவியதுதான்.
இறக்குமதி
பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த இறக்குமதியின் அளவு 15.66 சதவீதம் சரிந்து 28.39 பில்லியன் டாலராக உள்ளது. இதில் எண்ணெய் இறக்குமதி 55 சதவீதம் சரிந்து 6.1 பில்லியன் டாலராகவும், தங்க இறக்குமதி 48 சதவீதம் உயர்ந்து 1.98 பில்லியன் டாலராகவும் உள்ளது.
நாட்டின் வளர்ச்சி!!
சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில், இந்தியா 7.2 சதவீத அளவில் வளர்ச்சி அடையும் என தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவின் ஏற்றுமதியின் அளவு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (FIEO) தலைவர் ரபீக் அகமது தெரித்தது குறிப்பிடத்தக்கது.