பெங்களுரூ: கர்நாடகாவில் விரைவில் பெட்ரோல் - டீசல், புகையிலை, மதுபானங்களின் விலை உயர்கிறது. இத்தகவலை கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தினார்.
முதல்வர் சித்தராமையா தனது 10வது மாநில பட்ஜெட் அறிக்கையை மார்ச் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இப்பட்ஜெட் அறிக்கையில் மாநில நிதி நிலையை மேம்படுத்த 17 பொருட்களின் மீதான கலால் வரி அளவை சுமார் 6 சதவீதம் வரை உயர்த்தி 20 சதவீதமாக சித்தராமையா அறிவித்துள்ளார். இதன் மூலம் கர்நாடகவில் இனி பெட்ரோல்/டீசல், புகையிலை, மதுபானங்களின் விலை உயர்வது உறுதியாகியுள்ளது.
புகையிலை
மத்திய அரசு அறிவித்த 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சிகரெட் மீதான வரியை உயர்த்தியது, இதன் மூலம் நாட்டில் ஏற்கனவே சிகரெட் விலை உயர்ந்தள்ள நிலையில். தற்போது கர்நாடக மாநிலத்தில் புகையிலை பழக்கத்தை குறைக்கவும், கள்ளச் சந்தையில் நடக்கும் வர்த்தகத்தைக் குறைக்கவும் வாட் வரியை உயர்ந்த்தியுள்ளது.
வரி உயர்வு
சிகரெட், சிகார், குட்கா மற்றும் இதர புகையிலை பொருட்களின் மீதான வாட் வரி 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
மேலும் சித்தராமையா கூறுகையில் கடந்த 6 மாத காலமாக கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட சரிவின் பயன்களை பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். இதனால் மாநிலத்தின் வருவாய் அளவு பாதிக்கப்பட்டுள்ளதை மறுக்கமுடியாது என்றார்.
1 சதவீத உயர்வு
மேலும் கடந்த 3 மாத காலத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை நான்கு முறை உயர்த்தியுள்ளது. அதே நேரம் நாட்டின் பல மாநிலங்கள், மாநில வரி வருவாய் அளவை ஈடு செய்ய பெட்ரோல்/டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளன. இப்போது கர்நாடக அரசும் இந்த வரியை 1 சதவீதம் உயர்த்துகிறது. ஆனால் மக்கள் நலன் பாதிக்கப்படாத அளவு உயர்த்தப்படுவதாக சித்தராமையா தெரிவித்தார்.
மதுபானம்
புகையிலை மற்றும் பெட்ரோல்/டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ள போது மதுபானத்தின் விலையும் மறைமுகமாக உயர்த்தப்படும். 20 சதவீத கலால் வரியில் மதுபான பொருட்கள் மீதான வரியும் அடக்கம்.
15,200 கோடி ரூபாய்
இந்த வரி உயர்வின் மூலம் கர்நாடக அரசின் கலால் வரித்துறைக்கு ரூ 15,200 கோடி ரூபாய் வரை வருமானம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.