டெல்லி: ரயில்வே துறையின் மறுசீரமைப்பு பணியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காயக் கல்ப் குழுவிற்கு ரத்தன் டாடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையை மேம்படுத்தும் பணியில் ரயில்வே அமைச்சகம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இத்துறையின் மறுசீரமைப்பு பணியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "காயக் கல்ப்" என்னும் புதுமைக் குழுவுக்கு டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே யூனியன்
இக்குழுவில் ரத்தன் டாடா உடன் ஷிவ் கோபால் மிஷ்ரா மற்றும் ரகுவய்யா ஆகிய இரு ரயில்வே யூனியன் தலைவர்களும் இணைந்துள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் இத்துறை பல பரிமானங்களில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணைப்பு
ரயில்வே துறையை மேம்படுத்தும் பணி மற்றும் திட்டங்களில் இரு யூனியன்கள் மத்தியில் கடுமையான கருத்து வேறுப்பாடு நிலவி வந்தது. இக்குழுவில் இரு தலைவர்களை இணைப்பதன் மூலம் விரைவான திட்ட நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியும் என ரயில்வே துறை அமைச்சகம் நம்புகிறது.
சுரேஷ் பிரபு
இக்குழுவில் மேலும் சிலரும் இணைய உள்ளதாகவும், அவர்களின் பெயர்களை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விரைவில் அறிவிப்பார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனி குழுக்கள்
சுரேஷ் பிரபு ரயில்வே துறை அமைச்சராக பதிவியேற்றிய பின் இத்துறையின் நிதியியல், நிர்வாகம், விதிமுறைகள் மற்றும் உயர்மட்ட நிர்வாக பிரிவுகளை ஆய்வு செய்யவும், மறுசீரமைப்பு நடவடிக்கையில் உட்படுத்தவும் தனி குழுக்களை அமைத்தார்.
சதானந்த கவுடா
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரான சதானந்த கவுடா, இத்துறையை மேம்படுத்த பொருளாதார வல்லுனரான பிபெக் டெப்ராய் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தார்.
இரு முக்கிய குழுக்கள்
இதன் பின் சுரேஷ் பிரபு இத்துறையின் நிதியியல் பிரிவை மேம்படுத்த நிதி சேவை செயலாளர் டி.கே. மிட்டல் தலைமையில் ஒரு குழுவையும், ரயில்வே துறையில் வெளிப்படை தன்மை அதிகரிக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தார்.
8 நபர்கள் கொண்ட குழு
இவை தவிர ரயில்வே துறையில் சரக்கு மற்றும் பயணிகள் எண்ணிக்கையை பாதிக்கும் காரணிகளை கண்டறிய ஜாம்ஷெட் தலைமையில் எட்டு நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.