பெங்களுரூ: நமது வீட்டு அருகில் இருக்கும் மளிகை கடைகளில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் விற்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது (மக்களை சோம்பேறியாக்க மேலும் ஒரு திட்டம்?!)
முதல்கட்டமாக இத்திட்டத்தை பெங்களுரில் மட்டும் செயல்படுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த சில வருடங்களில் இந்தியாவின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப் போகிறதாம் அமேசான்.
கிரானா ஸ்டோர்ஸ்
இத்திட்டத்தை அமேசான் நிறுவனம் மாம் அண்ட் பாப் நிறுவனத்துடன் இணைந்து எக்ஸ்பிரஸ் டெலிவரி திட்டத்துடன் செயல்படுத்த உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்ய பொருட்களை விரைவாக பெறுவார்கள் என அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான்
இதுகுறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமித் அகர்வால் கூறுகையில், "இத்திட்டம் முழுக்க முழுக்க இந்தியர்களால் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது. அதிலும் முக்கியமாக உள்நாட்டு சந்தை வாடிக்கையாளர்களுக்காக குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளோம்" என தெரிவித்தார்.
4 மணிநேரத்தில் டெலிவரி
இச்சேவை அமேசான் நிறுவனத்தின் மொபைல் அப்-களில் மட்டுமே பெற முடியும் எனவும், ஆர்டர் செய்த பொருட்கள் குறைந்தது 4 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.
பிக் பேஸ்கட்
ஆன்லைன் வர்த்தகத்தில் நிறுவனங்கள் பொதுவாக எலக்ட்ரானிக் மற்றும் ஆடை விற்பனையை முக்கியமாக கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் பிக் பேஸ்கட் போன்ற சில நிறுவனங்கள் மட்டும் பலசரக்கு விற்பனையில் இறங்கியுள்ளது. இதற்கு போட்டியாக அமேசான் களத்தில் குதித்துள்ளது.
விற்பனை தளம்
இச்சேவை விற்பனையாளர் மற்றும் நுகர்வோர்க்கு இடையேயான தளமாக செயல்பட உள்ளது. பெங்களுரில் உள்ள மூலைக்கடை, தெருக்கடை என அனைத்தும் விற்பனையாளராக அமேசான் தளத்தில் பதிவு செய்யப்படும். டெலிவரி வேலைகளை அமேசான் நிறுவனம் கவனித்துக் கொள்ளும்.
அமெரிக்க
அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் அமேசான் பிரஷ் என்ற பெயரில் ஆன்லைன் மளிகை கடை சேவையை 2007ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு கூகிள் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மிகப்பெரிய போட்டியாக திகழ்கிறது.