சென்னை: கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி நாட்டில் பல பொருட்களின் விலைவாசியில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. பட்ஜெட்டுக்குப் பிறகு விலை உயர, குறையப் போகும் பொருட்கள்...
ஹோட்டல் பில்
நீங்கள் அதிகமாக வெளியிடங்களில் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா, அப்படியானால் உங்கள் கைகளை கட்டிப்போடும் நேரம் வந்துவிட்டது. சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து இருந்து 14 சதவீதமாக அதிகரிப்பதால் இனி உங்களது ஹோட்டல் பில் பர்சை பதம் பார்க்கும்.
மொபைல் பில்
சேவை வரி அதிகரிப்பாலும், ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகை அதிகரிப்பாலும் தொலைபேசி கட்டணம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை.
சிகரெட்
இப்போதாவது உங்களது சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிட்டால் புண்ணியமாகப் போகும். நாட்டு மக்களின் புகைபிடிக்கும் பழக்கத்தை குறைக்க சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களை மூடாமல் சேவை வரியை மீண்டும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் சிகரெட் விலை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கண்டிப்பாக உயரும்.
விமானப் பயணம்
சேவை வரியின் உயர்வு காரணமாக விமான கட்டணங்களும் உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளின் விமான கட்டணங்கள் உயரும்.
சிமெண்ட்
கட்டுமானத் துறையின் வளர்ச்சி மற்றும் வேகத்தை தீர்மானிக்கும் சிமெண்ட் மீதான கலால் வரி உயர்வால், இதன் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் மீதான இறக்குமதி வரியை, மத்திய அரசு 40 சதவீதமாக உயர்த்தியதால் இவற்றின் விலையும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மின்னல் வேகத்தில் உயரும்.
பிற பொருட்கள்
அதுமட்டும் அல்லாமல் குளிர்பானங்கள், பிளாஸ்டிக் பைகள், மதுபானம், சிட் ஃபண்ட், லாட்டரி, இசைக் கச்சேரி மற்றும் தீம் பார்க் கட்டணங்களும் உயரப் போகின்றன.
தோல் காலணி
இனி நாம் பார்க்கபோவது ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் விலை குறையவிருக்கும் பொருட்கள்.
1000 ரூபாய் மதிப்புடைய தோல் காலணிகளின் விலை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் அதிகளவில் குறையும்.
எல்ஈடி மற்றும் எல்சிடி
எல்ஈடி மற்றும் எல்சிடிமொபைல் போன், எல்ஈடி/எல்சிடி பேனல், எல்ஈடி/எல்சிடி விளக்குகளின் விலை குறையும்.
நாட்டின் மின்சார பயன்பாட்டை குறைக்க எல்ஈடி/எல்சிடி விளக்குகளின் விநியோகத்தை மத்திய அரசு ஏற்று நடத்துவதால் இதன் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.
ஸ்டீல் பொருட்கள்
மத்திய அரசு ஸ்டீல் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதால் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற பொருட்கள்
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2015-16ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கத்தால் மைக்ரோ ஒவன், பிரிட்ஜ் கம்பரசர்ஸ், பழம் மற்றும் காய்கறிகள், சோலார் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றின் விலை குறையும்.