மும்பை: நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பட வேண்டும் என மத்திய அரசு கதறி வரும் நிலையில், வங்கிகள் கட்டுமானத்துறைக்கு அதிகளவில் கடன் அளிக்க கூடாது என ரிசர்வ் வங்கியின் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் தங்களது நிதி நிலையை கணக்கிட்டு, துறை மற்றும் அதன் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்றவாறு கடன் அளிக்க வேண்டும், இல்லையெனில் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு பலவீனமாக மாற துவங்கும் என ராஜன் கூறினார்.
வங்கிகள்
இந்தியாவின் கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அதிகளவிலான நிதி தேவைப்படும் நிலையில், சில வங்கிகள் கணக்கு இல்லாமல் இத்துறை நிறுவனங்களுக்கு கடன் அளித்துள்ளது.
இதனால் நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனங்களும் அதிகளவிலான கடன் நிலுவை வைத்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என ராஜன் தெரிவித்தார்.
80வது ஆண்டு விழா
இந்தியாவில் ரசர்வ் வங்கியின் துவங்கி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில் மும்பையில் விழா ஒன்று நடந்தது. இவ்விழாவில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நிதி நிலை
வங்கிகள் கட்டுமானத் துறைக்கு கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி எப்போதும் தடையாக இருக்காது. ஆனால் ஒவ்வொரு வங்கியும் வங்கியின் நிதிநிலை கண்டறிந்து இத்துறை நிறுவனங்களுக்கு கடன் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
செயல்படா சொத்துக்கள்
இந்திய வங்கித்துறையில் டிசம்பர் மாத முடிவில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான செயல்படா சொத்துக்கள் உள்ளது என ரகுராம் ராஜன் தெரிவித்தார்.