பெங்களூரு: இந்திய ஐடித்துறையில் அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நிறுவனமான இன்போசிஸின் வருடாந்திர பொதுக்கூட்டம் திங்கட்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் நிறுவனத்தில் மீண்டும் நாராயணமூர்த்தி வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
20 பில்லியன் டாலர் நிறுவனம்
இன்றைய நிலையின் படி இன்போசிஸ் நிறுவனம் 8.7 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தை 2022ஆம் ஆண்டுக்குள் 20 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்ற விஷால் சிக்கா தலைமையில் பல்வேறு மாற்றங்களையும், புதிய முயற்சிகளையும் இன்போசிஸ் செய்து வருகிறது.
புதிய துறைகள்
இதன் படி இன்போசிஸ் நிறுவனம் தற்போது ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு (AI), புதிய தொழில்நுட்ப தளம், மற்றும் புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு ஆகியவற்றில் இறங்கியுள்ளது.
விஷால் சிக்கா
இந்நிகழ்ச்சியில் பேசிய விஷால் சிக்கா, "தற்போது வடிவமைத்துள்ள "Renew and New" திட்டத்தின் படி 2022ஆம் ஆண்டுக்குள்ள 20 பில்லியன் டாலர் நிறுவனமான மாற முடியும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
நாராயணமூர்த்தி
இதன்பின் முதல் முறையாகப் பங்குதாரராக மட்டும் பேசிய நாராயணமூர்த்தி, நிறுவனத்தைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல விஷால் சிக்காவிற்கு அனைத்து தகுதியும், திறனும் உண்டு. இவர் கொண்டு வந்த மாற்றங்களின் மூலம் பணியாளர்கள் மத்தியில் புதிய உற்சாகம் பிறந்துள்ளது. எனவே இவரது செயல்பாட்டை அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் நிறுவன வளர்ச்சியைப் பொருத்திருந்து பார்ப்போம் எனவும் குறிப்பிட்டார்.
சேஷசாயி
அதன் பின் பேசிய செயற்படா நிர்வாகத் தலைவர் சேஷசாயி, நிறுவன வளர்ச்சிக்கு நாராயணமூர்த்தி அவர்களின் அறிவுரை மற்றும் தொலைநோக்குப் பார்வை கண்டிப்பாகத் தேவை எனக் குறிப்பிட்டார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் மூர்த்தி
இதன்பிடி அடுத்தச் சில மாதங்களில் இன்போசிஸ் நிர்வாகக் குழுவில் நாராயணமூர்த்தி இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பங்குச் சந்தை
இன்போசிஸ் நிறுவனத்தின் ஆண்டுக் பொதுக் கூட்டத்தின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் 2.09 சதவீதம் அளவு சரிவை சந்தித்தது.