மும்பை: இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 100 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு எண்களை ஏறு வரிசை அளவுகளில் அச்சிடப்பட்டுள்ளதாக ஆர்பிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தைக் குறைக்கும் வகையில் 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 100, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற்று வருகிறது.
ஏறு வரிசையின் எண்கள்
இப்புதிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி மகாத்மா காந்தி 2005 வரிசை நோட்டுகளில் செய்துள்ளது. மேலும் இப்புதிய ரூபாய் நோட்களின் வெளியீடு கூடிய விரைவில் துவங்கும் எனவும் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
ரூபாய் சின்னம்
இப்புதிய நோட்டுகளில் ரூபாய் நாணயத்திற்கான சின்னம் "₹" முன்பக்கம் பின்பக்கம் ஆகிய இரு பகுதிகளிலும் இடம்பெறும். மேலும் எண் களத்தில் R என்ற எழுத்து அச்சிடப்பட்டு இருக்கும், அதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களின் கையெழுத்தும் புதிதாக அச்சிடப்படும் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும்.
பிற ரூபாய் நோட்டுகள்
இப்புதிய மாற்றங்கள் பிற ரூபாய் நோட்டுகளிலும் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் பகுதி திட்டங்களாக நிறைவேற்றப்படும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
கள்ள நோட்டுகள்
இப்புதிய முறையின் மூலம் மக்கள் கள்ள நோட்டுகளை எளிமையாகக் கண்டுபிடிக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஏறு வரிசை அளவுகளில் அச்சிடப்பட்டுள்ள எண்கள் மக்களுக்குப் புலப்படும் வகையில் அமைந்துள்ளது.
பாதுகாப்புக் குறிகள்
இந்தியாவில் புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு தன்மையை அதிகரிக்கவும், கள்ளநோட்டுகள் அச்சடிக்க முடியாக வகையில் வடிவமைக்கவும் ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு இப்பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.