மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது முன்னாள் பணியாளர் மீது, நிறுவனத்தின் முக்கிய மற்றும் பாதுகாப்பான தகவல்களைத் திருடியுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இத்தகவல்கள் நாட்டில் மிகப்பெரிய அளவில் 4ஜி சேவையை விரிவாக்கம் செய்ய உள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்திற்குக் கைமாற வாய்ப்புள்ளதாக ஏர்டெல் கூறுகிறது.
யாசிர் மஜித்
ஏர்டெல் நிறுவனத்தில் 10 ஆண்டுகாலமாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றிய யாசிர் மஜித், இந்நிறுவனத்தை விட்டு ஏப்ரல் மாதம் வெளியேறி தற்போது ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தின் இணைந்துள்ளார்.
ஏர்டெல் வழக்கு
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் அளித்துள்ள புகாரில் யாசிர் மஜித் கடந்த ஏப்ரல் மாதம் ஏர்டெல் நிறுவனத்தை விடுத்து ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவர் நிறுவன பணியில் இருக்கும்போதும் நிறுவனத்தின் நிதிநிலை, வருமானம், பேஸ்ஸ்டேஷன் தகவல்களைப் பதிவிறக்கம் செய்து அதனை ஈமெயில் செய்துள்ளார். இத்தகவல்களைத் தற்போது தான் இணைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க வாய்ப்புண்டு, என ஏர்டெல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
தகவல்கள்
யாசிர் மஜித் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பேஸ் ஸ்டேஷன் தகவல்களை நிறுவன விதிகளுக்குப் புறம்பாகப் பதிவிறக்கும் செய்துள்ளார். இதில் இப்பகுதியில் ஏர்டெல் பெறும் வருமானம், கதிரியக்கம் போன்ற பல விபரங்கள் உள்ளதாக ஏர்டெல் தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தை மே 26ஆம் தேதியன்று ஏர்டெல் கண்டுபிடித்துள்ளது.
4ஜி சேவை
இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி சேவையை நிலையாக விரிவாக்கம் செய்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் மிகவும் குறைந்த விலையில் சேவை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் இரு நிறுவனங்களுக்கும் மத்தியில் கடுமையான போட்டி நிலவும் அபாயம் உள்ளது.
வருகிற டிசம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது அதிவேக 4ஜி சேவையைத் துவங்க உள்ளது.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் சரிவை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications