டெல்லி: மத்திய அரசு நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்தார்.
இந்தியா - இலங்கை
தற்போது இந்தியா - இலங்கை நாடுகள் இடையேயான வர்த்தக இணைப்பை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த 22,000 கோடி ரூபாய் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி உதவி செய்வதாகவும் ஒப்புதல் அளித்துள்ளது.
நித்தின் கட்கரி
நெடுஞ்சாலை உபகரணக் கூட்டத்தில் கலந்துகொண்ட போக்குவரத்துறை அமைச்சர் நித்தின் கட்கரி கூறுகையில், "மத்திய அரசு செயல்படுத்த உள்ள 6 லட்சம் கோடி திட்டங்களில், 5 லட்சம் கோடி ரூபாய் சாலை போக்குவரத்திற்காகவும், 1 லட்சம் கோடி கப்பல் போக்குவரத்திற்காவும் செலவிடப்பட உள்ளது, இதன் மூலம் இந்தியாவில் அடுத்த 5 வருடத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்." எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு
இதில் ஏற்கனவே மத்திய அரசு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுச் செயல்படுத்த துவங்கியுள்ளது.
அண்டை நாடுகள்
தற்போது மத்திய அரசு அண்டை நாடுகளுடனான வர்த்தக இணைப்புகளை ஏற்படுத்த தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளது. இதனால் இலங்கை, சீனா, நேபால், வங்காளம் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் சில நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.