பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் வருகிற செப்டம்பர் மாதம் முதல் முற்றிலும் மொபைல் விற்பனை தளமாக மட்டும் செயல்பட முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் கைபற்றிய நிறுவனங்களில் ஒன்றான மைந்திரா, டெஸ்க்டாப் தளச் சேவை விட்டு வெளியேறி முற்றிலும் மொபைல் விற்பனை தளமாக மாறியது. தற்போது பிளிப்கார்ட் நிறுவனமும் இதே பாணியைப் பின்பற்றுகிறது.
இந்தியாவில் மொபைல் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே விற்பனையை மேலும் எளிமையாக்க நிறுவனம் இம்முறைகளைப் பின்பற்றுகிறது.
மேலும் இம்முடிவைக் குறித்துப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை திட்ட அலுவலர் கூறுகையில், "நிறுவன வாடிக்கையாளர்களில் 70 முதல் 75 சதவீதம் மொபைல் ஆப் மூலமே தங்களது வர்த்தகத்தைச் செய்கின்றனர். எங்கள் மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பல்வேறு மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிப்பதற்காகப் பரிசோதித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனமும் ஆப்-களில் மட்டுமே விற்பனை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
ஆனால் மைந்திரா நிறுவனம் செயலியில் மட்டுமே இயங்கி வருவதால் அதன் விற்பனையில் 10 சதவீதத்துக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனை மைந்திரா அதுவரை உறுதி செய்யவில்லை.
இதுகுறித்துப் பிற இ-காமர்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள் கூறுகையில், மொபைல் ஆப்-களில் மட்டுமே செயல்படுவது சிறந்த திட்டமாக இருக்காது எனக் கூறுகின்றனர். சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யும் அமேசான், ஈபே, அலிபாபா கூட இதுபோன்ற முடிவுகள் எடுக்கவில்லை.