மும்பை: இந்திய வங்கித் துறையில் சீர்திருத்த பணிகளை விரைவுப்படுத்தவதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை மிகப்பெரிய சிக்கலில் இருந்து மீட்க முடியும்.
ஆனால் மத்திய அரசு தொடர்ந்து இப்பணிகளில், தாமதம் காட்டி வருவதால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்சனையைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது, எனவே சீர்திருத்த பணிகளை விரைவுபடுத்துமாறும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
வங்கித்துறை
தற்போதைய நிலையில் இந்திய வங்கித்துறை சர்வதேச பொருளாதாரத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு இல்லை, இதனால் மந்தமான சீர்திருத்த பணிகள் இந்திய பொருளாதாரத்தை அதிகளவில் பாதிக்கும் என ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியா..
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீர்திருத்த பணிகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும், அதிலும் நிலையற்ற மற்றும் ஆபத்தான பொருளாதாரச் சூழலில் வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் முன்னேற்றம் அடையவேண்டும் என ரிசர்வ் வங்கியின் 2014-15ஆம் ஆண்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
சீனாவும்.. சீர்திருத்தமும்...
இன்றைய நிலையில் சீன பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் உள்ளது. இதனால் வங்கித்துறையில் செய்யப்படும் சீர்திருத்தத்தின் மூலம் இந்திய பொருளாதாரத்தின் நிலை கண்டிப்பாக மாறும்.
மேலும் இந்திய நிதித்துறையில் பல பரிவுகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. இதனை உடனடியாகச் செய்யும் வேண்டும் எனவும் ராஜன் வலியுறுத்தினார்.
அருண் ஜேட்லி
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா பொருளாதாரத்திற்கு நிகராக இந்திய உயர இது சரியான தருணம். அடுத்த 6 மாத காலத்தில் சீனாவிற்கு நிகராக இந்தியா உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.