டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவில் போயிங் 787 ரக விமானங்களை இயக்கும் 30 சீனியர் பைலட்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர், இதனால் ஏர் இந்தியா நிர்வாகம் செய்வது அறியாமல் தவித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்க ஏர் இந்தியா நிர்வாகம் மற்றும் மத்திய அரசு பல கோடி முதலீட்டில் புதிய முயற்சிகள் செய்துவரும் நிலையில் 30 பைலட்களின் வெளியேற்றம் இந்நிறுவனத்தை நிலைகுலைய வைக்கும் நிலை உருவாகியுள்ளது.
15 கோடி ரூபாய்
வெளியேறிய 30 பைலட்களுக்கு, 3 வருடத்திற்கு முன் ஏர் இந்தியா வாங்கிய விமானங்களை இயக்க 15 கோடி ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவருக்கு எவ்விதமான பணியில் நிலைத்திருப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இதனால் இவர்கள் விருப்பம் போல் எப்போது வேண்டுமானாலும் ஏர் இந்தியாவை விட்டு வெளியேற முடியும்.
மேலும் இவர்களின் மூலம் தான் ஏர் இந்தியா தற்போது இயங்கி வருகிறது என்றால் மிகையாகாது.
தகுதியுடைய பைலட்கள்
ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது ராஜினாமா கடிதம் அளித்துள்ள 30 பைலட்களும் 4000 மணிநேரம் விமான இயக்கியதற்கான அனுபவம் உடையவர்கள்.
ஏர் இந்தியா பைலட்
இதுகுறித்து ஏர் இந்தியா விமானப் பைலட் ஒரு கூறுகையில், "தனியார் விமான நிறுவனங்களில் 4,000 மணிநேரத்தில் பாதி இருந்தால் கூடப் போதும் கேப்டன் என்ற நிலையை எட்டி விடலாம். ஆனால் ஏர் இந்தியாவில் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. இத்தகைய பெறும் நிறுவனங்களில் உயர் பதவியை அடைவது தான் அனைவரின் ஆசை மற்றும் லட்சியம்." என அவர் தெரிவித்தார்.
ஸ்பைஸ்ஜெட்
30 பைலட்களில் இருவர் ஏற்கனவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும், மற்றவர்கள் தென் ஆப்பிரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும்.
விமான இயக்கம்...
30 பைலட்கள் வெளியேறியுள்ளதால் இந்நிறுவனத்தின் விமான இயக்கம் பாதிக்கப்படாது. ஏனெனில் இவர்கள் அனைவரும் பயிற்சியில் உள்ள விமானிகள் என்பது ஏர் இந்தியாவிற்குச் சாதகமான ஒன்று.
நான்கில் ஒரு பங்கு காலி..
போயிங் 787 ரக விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா பைலட்கள் எண்ணிக்கை 120, இதில் தற்போது நான்கில் ஒரு பங்கு குறைவதால், இந்நிறுவனத்தின் செயல்பாடு முழுமையாகப் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அஷ்வானி லோகானி...
இப்பிரச்சனையை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஏர் இந்தியா நிறுவனத்தின் அஷ்வானி லோகானி முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்திய ரயில்வே துறையின் உயர் அதிகாரியான அஷ்வானி லோகானி ஆகஸ்ட் 31ஆம் தேதி ஏர் இந்தியாவில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பதிவியேற்றார்.