டெல்லி: இந்தியாவில் உற்பத்தி செய்து உள்ளாட்டில் மட்டும் அல்லாமல் பன்னாட்டு சந்தைகளிலும் கார் விற்பனை செய்யும் ஜெர்மானிய ஆட்டோமொபைல் நிறுவனமான 'ஆடி' தனது உற்பத்தியை அதிகரிக்கப் புதிய முதலீட்டைச் செய்வதாக அறிவித்துள்ளது.
புதன்கிழமை அன்று ஜப்பான் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா இந்திய சந்தையில் தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்க 1,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்திற்குப் போட்டியாக ஆடி நிறுவனம் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.
புதிய முதலீடு
ஆடி நிறுவனத்தின் புதிய முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் உற்பத்தி அளவு 2020ஆம் ஆண்டுக்குள் 50,000 கார்கள் என்ற எண்ணிக்கையை எட்டும் எனத் தனது இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
அறிவிப்புகள்
இதுகுறித்து வோக்ஸ்வாகன் குழுமத்தின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்திய சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கான பேச்சுவார்த்தை மேல்மட்ட நிர்வாகக் குழு மத்தியில் உள்ளதால், கூடிய விரைவில் முறையான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என அவர் தெரிவித்தார்.
வோக்ஸ்வாகன் குழுமத்தில் ஆடி நிறுவனம் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
இந்தியாவில் ஆடி...
இதுகுறித்து ஆடி இந்திய கிளையின் தலைவர் ஜோ கிங் அவர்களிடம் பேசிய போது, "இந்திய சந்தையில் நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது இதனை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல இப்புதிய முதலீடு கண்டிப்பாக உதவும்" எனத் தெரிவித்தார்.
34% சந்தை
இந்தியாவில் கடந்த வருடம் சந்தையில் 34 சதவீத இடத்தைப் பிடித்துள்ளோம். இவ்வருடம் சந்தையில் முன்னணி கார் விற்பனை நிறுவனமாகத் திகழ்வோம் எனவும் ஜோ தெரிவித்தார்.
விற்பனை..
மேலும் 2014ஆம் ஆண்டில் ஆடி நிறுவனம் 10,851 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து சந்தையில் 34 சதவீதத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பென்ஸ் நிறுவனம் வெறும் 10,201 கார்களை மட்டும் விற்று 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.