டெல்லி: மத்திய அரசின் கொள்கை வடிவமைப்பு இயக்கமான நித்தி அயோக் அமைப்பில், தூய்மை இந்தியா திட்டத்திற்காகப் பிரதமர் மோடி 10 மாநில முதல் அமைச்சர்கள் கொண்டு குழுவை அமைத்தார். இக்குழுவிற்கு ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமை வகிறார்
இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்துவதற்கான நிதி தேவையைப் பூர்த்திச் செய்யச் சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழு புதிய பரிந்துரையைச் சமர்ப்பித்துள்ளது.
வரி உயர்வு
தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்தவும், அதற்கான நிதியைத் திரட்டவும் பெட்ரோல், டீசல், மொபைல் கால் மற்றம் டேட்டா சேவைகளின் மீது புதிய வரியை விதிக்கலாம் என இக்குழு பிரிந்துரை செய்துள்ளது.
எரிபொருள் மற்றும் டெலிகாம் சேவைகளின் மீது வரியை உயர்த்துவது அரசுக்குச் சாதகமான முடிவாக இருக்காது என்றாலும், இந்த வரி விதிப்பு அடுத்த 2 வருடம் வரையில் மட்டும் அமலில் இருக்கும் எனவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டுப் பத்திரம்
கூடுதல் நிதியைத் திரட்ட மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடலாம் எனவும் சந்திரபாபு தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
நிதி பங்களிப்பு
இத்திட்டத்தை அமலாக்கம் செய்யும் பணியில் மத்திய - மாநில அரசுகளுக்கும் பங்கு உண்டு. இக்குழு பரிந்துரையின் படி நிதி பங்களிப்பு 75:25 என்ற விகிதத்திலும், வளர்ச்சி மற்றும் வசதிவாய்ப்புகள் குறைவாக இருக்கும் மலைபிரதேச மாநிலங்களை மத்திய மாநில பங்களிப்பு 90:10 விகிதத்திலும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்துறை கழிவுகள்
மேலும் நாட்டில் தொழிற்துறை கழிவுகளைச் சுத்தம் செய்யும் பணியில் நிலக்கரி, அலுமினியம், இரும்புத்தாது உற்பத்தித் துறையில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் வரி மற்றும் நிதியுதவியைத் திரட்டலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய உரங்கள்
ரசாயன உரங்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பதும் தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியப் பங்காகும். எனவே ரசாயன உர மானியத்தைக் குறைத்துக் கம்போஸ்ட் உரங்களுக்கு அதிக மானியம் அளித்து ஊக்குவிக்கலாம் என்று இப்பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கழிவறைகள்
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே இந்தியா முழுவதும் 15,000 கழிவறைகள் கட்ட மத்திய அரசு நிதிஒதுக்கியுள்ளது.
10 முதல் அமைச்சர்கள்
தூய்மை இந்தியா திட்டத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதில் பீகார், தில்லி, அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மிசோரம், சிக்கிம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மாநிஸ முதல் அமைச்சர்கள் அடங்கிய இக்குழுவிற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமை வகிக்கிறார்.