டெல்லி: 2015-16ஆம் ஆண்டில் நாட்டின் நிதி நிலையை மேம்படுத்த செலவின குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நிதியமைச்சகம் விரும்பவில்லை என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் அதிகளவிலான இறக்குமதி காரணமாக இந்தியாவில் வர்த்தகப் பற்றாக்குறை அதிகளவில் அதிகரித்துள்ள போதும் செலவின குறைப்பு வேண்டாம் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
செலவின குறைப்பு நடவடிக்கை
கடந்த சில வருடங்களாக நாட்டின் நிதிநிலையை மேம்படுத்த மத்திய அரசுக்கு செலவின குறைப்பு நடவடிக்கை பெரிதும் உதவி செய்தது.
ஆனால் நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்ததால் இத்தகைய நடவடிக்கைக்கு அவசியம் இல்லை என மத்திய நிதியைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ.20,000 கோடி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்ததால், மத்திய அரசின் மானிய தொகையில் சுமார் 20,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது. 2015-16ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 69 டாலர் தற்போது இதன் விலை 43.98 டாலராக உள்ளது.
நிதிப் பற்றாக்குறை
2015-16ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த ஜிடிபி அளவுகளில் 3.9 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் அளவை மேலும் குறைப்பதன் (செலவின குறைப்பு நடவடிக்கை) மூலம் நாட்டின் வளர்ச்சி பாதையில் தடைகள் உருவாகும்.
இதனைக் கருத்தில் கொண்டே செலவின குறைப்பு நடவடிக்கையை அமல்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கூடுதல் செலவுகள்
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்க உள்ள 7வது ஊதிய கமிஷன் மற்றும் ராணுவ வீரர்களுக்கான ஓன் ரேங்க் ஓன் பென்ஷன் திட்டத்தின் மூலம் மத்திய அரசிற்குக் கூடுதலாகச் சுமார் 25,000 கோடி செலவுகள் அதிகரிக்க உள்ளது.
இச்செலவுகளைச் சமாளிக்க மத்திய அரசு தனது முதலீட்டுக் குறைப்பு (disinvestment) அளவுகளை மாற்றியமைக்க உள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்
சர்வதேச சந்தையில் மத்திய அரசு கச்சா எண்ணெய்யின் விலை அதிகளவில் குறைந்ததால், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மானியம் சுமார் 20,000 கோடி ரூபாய் சேமித்ததோடு, பெட்ரோலியம் பொருட்களின் மீதான கலால் வரி உயர்வு ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு சுமார் 80,208 கோடி ரூபாய் வருமானம் பெற்றது.
செலவின குறைப்பு வேண்டாம்
இத்தகைய காரணங்களால் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் செலவின குறைப்பு நடவடிக்கையைக் கையாள வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.