டெல்லி: இந்திய ரயில்வே துறையில் எரிபொருளுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் வருடத்திற்கு 34,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
இச்செலவினத்தைக் குறைக்கத் திறம்பட வடிவமைக்கப்பட்ட திட்டத்துடன் எரிசக்திக்கான செலவுகளை அடுத்த 5 வருடத்திற்குள் ரூ.5,000 கோடி வரை சேமிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
ரயில்வேத்துறை ஆண்டுத் தோறும் டீசலுக்கு ரூ. 22,000 கோடியும், மின்சாரத்துக்காகவும் ரூ.12,500 கோடியும் செலவிடுகிறது.
ரயில்வே துறையில் எரிசக்தியை குறைவாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்துச் சர்வதேச அரங்கில் பேசிய சுரேஷ் பிரபு, தற்போது ரயில்வே துறையில் எரிசக்தி சேமிப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
இனி வாய்ப்புகள் கிடைக்கும் அனைத்து இடங்களிலும் குறைந்த எரிபொருள் செலவில் செயல்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மின்சாரம் மற்றும் டீசல் எரிபொருளுக்கு மாற்று வழிகளான சோலார், காற்றாலை மின்னுற்பத்தி, பயோ டீசல் உள்ளிட்ட மாற்று எரிசக்திகளைப் பயன்படுத்துவதோடு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.